வாழ்வாதாரம் பாதிப்பு.. ஸ்டெர்லைட் ஆலையை திறங்க.. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள மீளவிட்டானில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இந்த ஆலையால் ஏற்படுவதாகக் கூறி துவக்கம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன.
இந்த நிலையில், கடந்த கடந்த 2018-ம் ஆண்டு ஆலையைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
திரும்ப போகனுமா? திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் 'அவர்’ போக மாட்டார்! எச்.ராஜாவுக்கு வந்த கோபம்!
துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழப்பு
போரட்டத்தின் 100-வது நாளில் (மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட சென்றனர். அப்போது கலவரம் ஏற்பட்டது. இதில் போலீசார், போராட்டக்காரர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆலையை திறக்க கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டை அடுத்து மே 28-ம் தேதி ஆலை மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டதுடன், ஆலைக்கு சீல் வைத்தது. இந்த ஆலையை மீண்டும் திறக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றங்கள் மூலமாக முயற்சி மேற்கொண்டது. எனினும் இந்த முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆலை முற்றிலும் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வப்போது ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது
அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என்றும் எதிர்ப்புகள் தொடர்ந்து உள்ளன. இது தொடர்பாக அவ்வப்போது மாவட்ட ஆட்சியரிடம் இரு தரப்பினரும் மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் போராட்டத்தின் போது காயம் அடைந்தவர்கள் 16 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலை வாய்ப்பு இன்றி இருக்கிறோம்
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 16 பேர் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜிடம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- காற்று மாசுக்கு ஆலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்பு இன்றி இருக்கிறோம்.
ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆலை திறந்தால் எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஸ்டெர்லைட் நிர்வாகம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. காப்பர் உற்பத்திக்கு உலக நாடுகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.