நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தல்! ஆவலோடு எதிர்பார்ப்பதாக தமிழ் மகன் உசேன் தகவல்!
தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என எதிர்ப்பார்பதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இதைக் கூறியுள்ள நிலையில் தமிழ் மகன் உசேனும் இதனை தெரிவித்திருக்கிறார்.
தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் அதன்பிறகு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
வெளிநாட்டு வேலை.. பெரிய நிறுவனம்.. ஆனாலும் அரசியலுக்கு வந்தேன் -“காரணம்” தெரியுமா? பிடிஆர் ஓபன் டாக்
அதிமுக அவைத்தலைவர்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டி அக்கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான தமிழ் மகன் உசேன் தூத்துக்குடி ஜாமியா பெரிய பள்ளிவாசலில் உள்ள தர்காவுக்கு சென்று சிறப்பு துஆவில் கலந்துகொண்டார். அதன் பிறகு தர்ஹா அடக்கஸ்தலத்தில் மலர் போர்வை போர்த்தி வழிபாடு நடத்தினார்.
தமிழ் மகன் உசேன்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மீண்டும் அதிமுக தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட வேண்டியும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் வர வேண்டியும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டியும் தமிழகம் முழுவதும் உள்ள தர்ஹாகளுக்கு சென்று தாம் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
தர்ஹாவில் சிறப்பு து ஆ
இது வரை 22 தர்ஹாக்களுக்கு எடப்பாடி பழனிசாமிக்காக தாம் சென்றுள்ளதாகவும் இன்னும் பல மாவட்டங்களுக்கு தாம் ஆன்மிக பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என எதிர்ப்பார்பதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த பிறகு அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் வரக்கூடும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது பேச்சை வழிமொழியும் வகையில் தமிழ் மகன் உசேனும் இவ்வாறு பேசியிருக்கிறார்.