இப்படியுமா நடக்கும்? அதிர்ச்சி.. தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளை டார்கெட் செய்து கொள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளை குறிவைத்து பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இரண்டு நாட்கள் விடாமல் கொட்டிய கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தாமிரபரணிக் கரையோரம் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டன.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீட்டர் மழை பெய்து மிரட்டியது. இந்த மழையால் தென் மாவட்டங்களில் சில தினங்கள் இயல்பு நிலை முடங்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து வெளியேறினர். இப்படி மிகக் கடுமையான பாதிப்பை தூத்துக்குடி சந்தித்தது.
தற்போது மழை விட்டு 10 நாட்கள் ஆகிவிட்டாலும் கூட பல தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாமல் உள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகர் நகர், ராம்நகர் மற்றும் மாப்பிள்ளையூரணி பகுதிகளில் வெள்ள நீர் இன்னமும் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பலர் இன்னமும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஆனால், இந்த சோதனையான நேரத்திலும் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தனசேகர் நகரில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் இவரது வீட்டில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் கடந்த 26 ஆம் தேதி ஸ்டீபன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன், உடனடியாக உள்ளே சென்று பார்த்து இருக்கிறார். இதில் பீரோவில் இருந்த 26 பவுன் நகை 1 லட்ச ரூபாய் ரொக்கம் களவு போயிருந்தது. இதையடுத்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் ஸ்டீபன் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதுமட்டும் இன்றி ரகுமத் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் சூழ்ந்த வீடுகளை குறிவைத்து கொள்ளை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீட்டின் உரிமையாளர்கள் யாரும் புகார் அளிக்கதாதால் திருடு போன பொருட்களின் விவரம் தெரியவில்லை. வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே போன நேரத்தில் கூட கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்று இருக்கும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications