'அண்ணாத்த' படப்பிடிப்பு தளத்தை விட, எங்கள் இடம் பாதுகாப்பானதே.. ரஜினிக்கு விசாரணை ஆணையம் குட்டு!
தூத்துக்குடி: படப்பிடிப்பு தளங்களை விட, ஒரு நபர் ஆணைய விசாரணை நடைபெறும் இடம் பாதுகாப்பானதுதான் என்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். இதனால் அவருக்கு ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். பல நாட்கள் போராட்டம் அமைதியாக நடந்தது. ஒரு கட்டத்தில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றபோது, திடீரென பதற்றம் உருவானது.அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

ஒருநபர் ஆணையம் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம் இதுவரை 26 கட்ட விசாரணை முடிந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பத்திரிகையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அரசு துறையை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு சம்மன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். இதனால் நடிகர் ரஜினிகாந்தும் ஆஜராக வேண்டும் என்று ஒருநபர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் பலகட்ட விசாரணையிலும் நடிகர் ரஜினி ஆஜராகவில்லை. சமீபத்தில் கொரோனா பாதுப்பு காரணமாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியவில்லை என்று ரஜினி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆணையம் கேள்வி
இந்த நிலையில் இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஒரு நபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியதாவது:- துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்க்கு சம்மன் அனுப்பப்படும். ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தபோது பாதுகாப்பு காரணம் தொடர்பாக ஆஜராகவில்லை என்று ரஜினி கூறி இருந்தார். ஆனால் அவர் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பு தளங்களை விட, ஒரு நபர் ஆணைய விசாரணை நடைபெறும் இடம் பாதுகாப்பானதுதான் என்று அருள் வடிவேல் சேகர் கூறினார்.












Click it and Unblock the Notifications