தூத்துக்குடியே வியந்துடுச்சு..மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
தூத்துக்குடி: கடந்த 2 நாட்களாகவே இந்த சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. தூத்துக்குடி கலெக்டர் செய்த காரியம், மாவட்ட மக்களையே நெகிழ வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்ரஸ்தா தெருவை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-லட்சுமி தம்பதியினர்.. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்..

தூத்துக்குடி: மகள் பேச்சித்தாய், பிளஸ் 2 படித்து வருகிறார்.. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. ஓட்டு வீட்டில்தான் வசித்து வந்திருக்கிறார்கள்.. இந்த வீட்டிற்கு கரண்ட்கூட கிடையாது.
பள்ளி படிக்கும் பேச்சித்தாயும், அவரது தம்பியும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் இத்தனை காலமும் படித்து வந்திருக்கிறார்கள்.. தற்போது பிளஸ் 2 படிப்பையும் இப்படித்தான் படித்து வருகிறார்.
மாணவி வீடியோ: இதையடுத்து, தான் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து வருவதாக, ஒரு வீடியோ வெளியிட்டு, மாவட்ட கலெக்டருக்கு தெரியப்படுத்தினார் பேச்சித்தாய்.. இந்த விஷயம், சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. அத்துடன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜின் கவனத்துக்கும் இந்த வீடியோ வந்தது.
இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட கலெக்டர், உடனடியாக மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட உத்தரவிட்டார்.,. அத்துடன், நேரடியாகவே பேச்சித்தாய் வீட்டிற்கு கிளம்பி சென்றார்.. அந்த ஓட்டு வீட்டை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார்.
நிதியுதவி: அப்போது, தங்களுக்கு வீடு கட்ட நிதி தரவேண்டும் என்று மாணவி பேச்சித்தாய் மற்றும் அவரது அம்மா லட்சுமி இருவருமே கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.. கலெக்டரும் இந்த கோரிக்கையை ஏற்றார், தன்னுடைய விருப்ப நிதியில் இருந்து ரூ.2.10 லட்சம் நிதியை வழங்கினார்.
இந்த நிதியை கொண்டு, பேரூராட்சி சார்பில் பேச்சித்தாய் குடும்பத்துக்கு புது வீடு கட்டி கொடுக்கப்பட்டது.. இந்த வீட்டுக்கு திறப்பு விழாவும் சிறப்பாக நடந்துள்ளது.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இந்த விழாவில் கலந்துகொண்டதுடன், புதுவீட்டையும் தன் கையாலேயே ரிப்பன் வெட்டி வீட்டை திறந்து வைத்தார்... திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா, உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
பேச்சித்தாய்க்கு புது வீடு திறக்கப்பட்ட செய்தி சுற்றுவட்டாரத்தில் பரவிவிடவும், பொதுமக்கள் திரண்டு வந்து இந்த நிகழ்வில் பங்கேற்று, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சபாஷ் கலெக்டர்: அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக உடனடியாக மாணவிக்கு மின் இணைப்பு தந்ததுடன், அவர்களது குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி புதிய வீடு கட்டவும் உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பேச்சித்தாயின் குடும்பம் கண்ணீர்மல்க நன்றி சொன்னது.. மாவட்ட மக்களும் இந்த சம்பவத்தை பார்த்து கலெக்டருக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications