தமிழகத்தை அதிர வைத்த தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு.. ஒரு சிறுவன் உள்பட மேலும் 3 பேர் கைது
தூத்துக்குடி: தமிழகத்தையே அதிர வைத்த தூத்துக்குடி புதுமண தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்பட மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 24). தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக மாரி செல்வம் பணியாற்றி வந்தார். மாரி செல்வத்திற்கும் தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது.

மகளின் காதலுக்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 30 ஆம் தேதி மாரி செல்வம் தனது காதலி கார்த்திகாவை அழைத்துக் கொண்டு கோவில்பட்டியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார். பிறகு கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். புதுமண தம்பதி கோவில்பட்டியிலேயே தங்கி இருந்துள்ளனர்.
துஇந்த நிலையில், திருமணம் முடிந்து 3 நாட்கள் கழித்து புதுமண தம்பதியினர் முருகேசன்நகரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளனர். பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் மாரிச்செல்வம், கார்த்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது மூன்று மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்கு வந்த நிலையில், எதுவுமே பேசாமல் ஆவேசத்துடன் கையில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மாரிச் செல்வம், கார்த்திகாவை பயங்கரமாக தாக்கி உள்ளனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் காதல் ஜோடிகள் இருவருமே உயிரிழந்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் உடனே விரைந்து வந்து கார்த்திகா, மாரிச் செல்வம் ஜோடியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனிடையே கொலை நடந்த இடத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., புறநகர் டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், ஆட்களை வைத்து இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
முத்துராமலிங்கத்திற்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூத்த மகளான கார்த்திகா, பொருளாதார வசதி குறைவான மாரிச் செல்வத்தை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததால், இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை கார்த்திகாவின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், காதல் திருமண ஜோடி வெட்டி படுகொலை செய்ப்பட்ட வழக்கில் மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இசக்கி ராஜா, ராஜபாண்டி, ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications