உடம்பெல்லாம் காயம்.. திடீரென தற்கொலை, போலீஸ் விசாரணையால் தூக்கிட்டதாக பரபரப்பு.. பதறும் தூத்துக்குடி
ஆஸ்பத்திரியில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
தூத்துக்குடி: "உடம்பெல்லாம் காயங்கள் இருக்கு.. வலிக்குதுன்னு சொல்லிட்டே இருந்தார்.. போலீசார் அடித்ததில்தான் அவமானம் தாங்காமல் தூக்கு போட்டுக் கொண்டார்" என ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கட்டிட தொழிலாளியின் தற்கொலை குறித்து குடும்பத்தினர் கதறி அழுதபடியே சொல்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. கடந்த வாரம் தண்ணி அடித்துவிட்டு, ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.. அப்போது தள்ளாடி தள்ளாடி நடந்ததில், கீழே விழுந்துவிட்டார்.

இதை பார்த்து பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. விரைந்து வந்த போலீசார் கணேசமூர்த்தியை சம்பவ இடத்திலேயே கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.. பிறகு கணேச மூர்த்தியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து மீட்டு, ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்து இருக்கிறார்கள்.
ஆனால், கணேசமூர்த்தியோ திடீரென நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அடித்ததில்தான் அவமானம் தாங்காமல் தூக்கு போட்டுக் கொண்டதாக உறவினர்கள் கதறியபடியே குற்றஞ்சாட்டுகிறார்கள்... ஆஸ்பத்திரியில் சேர்த்ததில் இருந்தே மன உளைச்சலாக இருக்கிறது என்றும், உடம்பெல்லாம் வலிக்கிறது என்றும் கணேச மூர்த்தி சொல்லி கொண்டே இருந்தாராம்.
ஆனால், உறவினர்களின் இந்த குற்றச்சாட்டை போலீஸ் தரப்பு இதனை மறுத்துள்ளது. எனினும் கணேசமூர்த்தி தற்கொலை சம்பந்தமான விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சாத்தான்குளம் மரணத்தின் அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில் மற்றொரு சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications