திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றம்..26ல் தேரோட்டம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 26ஆம் தேதி ஆவணித் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில். இங்கு ஆவணி, ஐப்பசி, மாசி மாதங்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
ஆவணித் திருவிழாவை முன்னிட்டு நாளை புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம், தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
5ஆம் நாள் திருவிழாவான 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். இரவு 7.30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது.
7ஆம் திருவிழா 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை நடக்கிறது.
8.45 மணிக்கு வெற்றிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
8ஆம் திருவிழா 24ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. 10ஆம் திருவிழா 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திருவிழாவுடன் ஆவணித் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் முருகப் பெருமான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி சப்பர உலா நடைபெறும். பச்சை நிறமாக தோற்றமளிக்கும் சண்முகரைப் பார்த்தால் வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதுண்டு.
சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆவணித் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கானோர் திருவிழாவைக் காண திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.