திருச்செந்தூரில் முருகன் கோயிலில் விசேஷம்.. குடமுழுக்கு விழாவுக்கு 400 ஸ்பெஷல் பஸ்! பக்தர்கள் ஹேப்பி
தூத்துக்குடி: கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது... இதனால் திருச்செந்தூர் நகரமே மும்முரமாகி கொண்டிருக்கிறது. விழாவுக்கான அத்தியாவசிய தேவைகள் முதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை செய்யப்பட்டு வருகின்றன. இது பக்தர்களுக்கு ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக போக்குவரத்து துறையும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது
திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு 300 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

குடமுழுக்கு விழா
கோவிலில் திருமண மண்டபம், கலை அரங்கம், பூங்கா போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோவிலில் ராஜகோபுரம் சீரமைப்பு, பக்தர்கள் தங்கும் விடுதிகள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்துமே முடிந்த நிலையில், ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது...
கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள், கடல் அரிப்பினை தடுத்திடும் வகையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.. ஜூலை 1-ம் தேதி யாகசாலை நடப்பதால், ராஜகோபுர வாசல் அருகில் 8000 சதுர அடி பரப்பளவுள்ள 76 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு கட்டுமான பணிகள்
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறுகிறது.. ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடக்கிறது.. இதனால், திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோயிலில் கிரிப்பிரகாரப்பாதை சீரமைப்பு, கடற்கரை சீரமைப்பு, கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
குறிப்பாக, 18 தற்காலிக பார்க்கிங் வசதி, தற்காலிக பஸ் நிறுத்தம், கூடுதலாக 510 கழிப்பிடங்கள், 30 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 160 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.. மொத்தத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு குடமுழுக்கு மற்றும் கோவில்கள் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது.
சிறப்பு பேருந்துகள்
இந்நிலையில், திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையொட்டி 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. திருச்செந்தூருக்கு வெளியூர், உள்ளூர் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லக்கூடும் என்பதால், பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு 07-07-2025 அன்று நடைபெறவுள்ளதால், இதனையொட்டி பொதுமக்கள் பங்கேற்க வசதியாக 04-07-2025 5 08-07-2025 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருக்கிறார்.. இந்த அறிவிப்பானது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
5 லட்சம் பக்தர்கள்
பக்தர்கள் முன்பதிவு செய்ய QR Code - ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.. இந்த குடமுழுக்கு விழாவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குடமுழுக்கு விழாவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வேதபாராயணம் மற்றும் திருமுறை விண்ணப்பம் பாடப்படும். மேலும் நாதசுர இன்னிசை கச்சேரியுடன் பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் பாடப்பட உள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications