திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை இல்லை.. மாவட்ட எஸ்பி கொடுத்த விளக்கம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை இல்லை என்று தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே திருச்செந்தூர் கோவில் முன் தங்கம் பக்தர்களின் பொருட்கள் திருடுபோவது அதிகரித்த நிலையில், கோவில் நிர்வாகம் கடற்கரையில் தங்க அனுமதியில்லை என்று கூறியது. ஆனால் காவல்துறை தரப்பில் பாதுகாப்புடன் தங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம், தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம், கடற்கரையை ஒட்டிய இடம் என்று பல்வேறு சிறப்புகள் இருப்பதால், தினமும் வெளியூர், வெளி மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளின் இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்வோரின் வாழ்க்கையில் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்று பக்தர்களிடையே வதந்தி பரவிவிட்டது. இதனால் ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் திருச்செந்தூர் கடற்கரையில் தங்குவோரின் எண்ணிக்கை லட்சங்களில் அதிகரித்துள்ளது.
இதனிடையே கடற்கரையில் தங்கும் பக்தர்களின் பொருட்கள் சமீப காலமாக திருடு போவது அதிகரித்துள்ளது. என்னதான் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டாலும், ஒவ்வொரு நாளும் காவலர்களிடம் அதிகளவில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோவில் நிர்வாகம் தரப்பில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
அதாவது இன்று முதல் திருச்செந்தூர் கடற்கடையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் தங்கும் விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க எந்த தடையும் இல்லை. வடகிழக்கு பருவமழை, திடீர் மழை காரணமாக அந்த நேரத்தில் மட்டும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரையில் தங்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் கோவில் செல்லும் பக்தர்கள் பலரும் நள்ளிரவு புறப்பட்டு, அதிகாலையில் கடலில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications