திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! 11 நாள் தனிமை வாசம்.. மீண்டும் பக்தர்களுக்கு ஆசி வழங்க வந்த தெய்வானை!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யானை தெய்வானை தாக்கி பாகன் உதயகுமார் அவரது உதவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெய்வானை இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் கோயில் விலாச மண்டபத்தில் யானைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 11 நாட்களுக்கு பிறகு யானை வெளியே அழைத்து வரப்பட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியது.
முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்துச் செல்கிறார்கள்.

கடற்கரை ஓரம் இருக்கும் ஒரே ஒரு படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு திருவிழா காலங்களில் முருகப் பெருமானை வழிநடத்திச் செல்ல தெய்வானை என்ற 26 வயது மதிக்கத்தக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
திருவிழா காலங்களில் போது பெண் யானையான தெய்வானைக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும். அப்போது பக்தர்கள் யானைக்கு பழங்கள் வழங்கி ஆசீர்வாதம் பெறுவார்கள். இந்த யானையை பாகன் உதயகுமார் என்பவர் பராமரித்து வருகிறார். இதற்காக ராஜகோபுரத்திற்கு அருகிலேயே சிறிய குடில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் பக்தர்கள் கொடுக்கும் உணவால் யானைக்கு உடல்நல பிரச்சனை வரலாம் என்பதன் காரணமாக அதற்கு உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று யானை கொட்டகை அருகே நின்ற போது யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றார். அப்போது அவரது உறவினரும் முன்னாள் ராணுவ வீரருமான கன்னியாகுமரியை சேர்ந்த சிசுபாலன் என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென யானை அவர்களை மிதித்துக் தாக்கியது.
இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உதயகுமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் இழந்தார். யானை மிதித்ததால் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நீண்ட நேரம் யானைக்கு அருகே நின்றதாலும் அதனை தொட்டு செல்ஃபி எடுக்கு முயன்றதால் தன்னை வேறு யாரோ தொடுவதாக உணர்ந்து தெய்வானை பாகன் உதயகுமாரையும் சிசுபாலனையும் மிதித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்திற்கு பிறகு தனது பாகனை கொன்றதை உணர்ந்த யானை தெய்வானை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் யானை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர்களும் யானை தெய்வானையை தொடர்ந்து கவனித்து வந்தனர்.
தொடர்ந்து, வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் யானையை கண்காணித்து வந்தனர். மேலும் யானையின் பாகன்களான ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோர் யானையை தினமும் குளிக்கச் செய்து உணவு வழங்கி பராமரித்து வந்தனர். தொடர்ந்து யானைக்கு அருகே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு காரணமாக யானை தெய்வானை இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதனையடுத்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ள ஆனந்த விலாச மண்டபத்தில் யானைக்காக சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் யானையின் மீதும், யானை தங்கி இருந்த மண்டபத்திலும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து 11 நாட்களுக்குப் பிறகு தெய்வானை நேற்று மண்டபத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து வழக்கமான உற்சாகத்துடன் தலையை ஆட்டியபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. இதனால் பக்தர்கள் தெய்வானையிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications