வான் தீவுக்கு பயணித்த கனிமொழி! கடல் வாழ் உயிரினங்களை கையில் ஏந்தி உற்சாகம்! திக் திக் அதிகாரிகள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள வான் தீவுக்கு, கனிமொழி எம்.பி படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பவளப்பாறை, ஆக்டோபஸ், உள்ளிட்ட இன்னும் பல அரியவகை கடல் வாழ் உயிரினங்களை தனது கையில் ஏந்தி உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தார்.
கடல் பகுதியில் உள்ள வான் தீவுக்கு வனத்துறைக்கு சொந்தமான படகில் கனிமொழி பயணித்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மிகுந்த கவனத்துடன் இருந்தனர்.

21 தீவுகள்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி அருகே உள்ள வான் தீவு கடல் பகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதில் வான் தீவின் நிலப்பரப்பு மெல்ல மெல்லக் குறைந்து வருவதால் நிலப்பரப்பை அதிகப்படுத்தும் வகையில் அலைத்தடுப்புச் சுவர்கள், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

கனிமொழி பயணம்
இந்த பணிகளையும், வனத்துறை மூலம் வான் தீவு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் கனிமொழி எம்.பி படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வான் தீவு பகுதியில் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரும் பனை மர செடிகளையும் பாதுகாக்கப்பட்ட பவளப் பாறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்.பி இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கடல் வாழ் உயிரினங்கள்
ஆய்வுக்குச் சென்ற கனிமொழி எம்.பி. தீவுப்பகுதியில் உள்ள கடலில் இறங்கி பவளப்பாறை, ஆக்டோபஸ், உள்ளிட்ட இன்னும் பல அரியவகை கடல் வாழ் உயிரினங்களை தனது கையில் ஏந்தி ஆச்சரியம் விலகாமல் பார்த்து மகிழ்ந்தார். கனிமொழி எம்.பி.யுடன் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் அமைச்சர் கீதா ஜீவன், என்ன காரணத்தினாலோ வான் தீவுக்கு இன்று செல்லவில்லை.

போலீஸார் பாதுகாப்பு
இதனிடையே வான் தீவுக்கு கனிமொழி எம்.பி. படகு மூலம் கடலில் பயணித்ததால் அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மிகுந்த விழிப்புடன் இருந்தனர். வான் தீவிலிருந்து கனிமொழி மீண்டும் கரை திரும்பிய பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.












Click it and Unblock the Notifications