தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி: தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையில் கார் விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த ஆலை மூலமாக ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றடைந்தார். உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி - மதுரை புறவழிச் சாலையில் சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் கார் உற்பத்திக்கான ஆலை அமைக்கும் வகையில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். தூத்துக்குடியில் முதல்கட்டமாக ரூ. 1,119.67 கோடி மதிப்பில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்த ஆலை மூலமாக ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதற்காக காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்ற முதல்வர், கார் தொழிற்சாலையை திறந்து வைத்து காரில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடுதான். நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவீதம் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
ரூ. 32 ஆயிரம் கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலமாக ரூ. 32 ஆயிரத்து 554 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால், 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தூத்துக்குடியில் கேனிஸ் சர்க்யூட் இந்தியா நிறுவனம் ரூ. 4 ஆயிரத்து 995 கோடி முதலீடு செய்யவுள்ளது. தேனி மாவட்டத்தில் ரூ. 1,500 கோடி முதலீட்டில் சூரிய சக்தி மின் தகடு உற்பத்தி செய்யும் ஆலை அமையவுள்ளது. டெல்லியைச் சேர்ந்த மோபியஸ் எனர்ஜி நிறுவனம் ரூ. 1,500 கோடியில் ஆலையை அமைக்கவுள்ளது.
தொடர்ந்து, தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னைக்கு முதல்வர் ஸ்டாலின் திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications