ராகுல் 50-வது பிறந்தநாள்... விளை நிலங்களை இலவசமாக உழுது தரும் தூத்துக்குடி காங்கிரஸ்
தூத்துக்குடி: ராகுல்காந்தியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விளை நிலங்களை இலவசமாக உழுது கொடுக்கிறார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர்.
காங்கிரஸ் நிர்வாகியின் இந்த புதுமையான முயற்சிக்கு கோவில்பட்டி சுற்று வட்டார விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தலைவர்களின் பிறந்தநாளுக்கு நலத்திட்டம் என்ற பெயரில் ஏதேதோ செய்வதற்கு பதில் இது போன்ற பயன் உள்ள காரியங்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டால் அது விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும்.
சூரிய கிரகணம் 2020: கிரகணங்களின் தீய கதிர்வீச்சில் இருந்து காக்கும் தர்ப்பை புல்
விவசாயிகளுக்கு உதவிக்கரம்
ராகுல்காந்தியின் 50-வது பிறந்தநாளையொட்டி நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர். கொரோனா பேரிடர் காரணமாக ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்து, விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்குமாறு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை எந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பின்பற்றினார்களோ இல்லையோ, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் முழுமையாக பின்பற்றி விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
விளை நிலங்கள்
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகுட்பட்ட விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த மூன்று தொகுதிக்குட்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழ வேண்டும் என விரும்பினால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், ஒரு பைசா கூட காசு வாங்காமல் முழுவதும் உழவு செய்து தரப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கு பேருதவி
டிராக்டர் வைத்து விளைநிலங்களை உழவு செய்ய மணிக்கு இவ்வளவு என கணக்கு செய்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா பேரிடரில் இது விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருந்த தருணத்தில் காங்கிரஸ் நிர்வாகியின் இந்த உதவிக்கரம் விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. இதனிடையே ராகுல் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியினரின் இந்த உதவிக்கு கோவில்பட்டி பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பெயருக்கு அல்ல
பொதுவாக தலைவர்கள் பிறந்தநாள் என்றால், அரசியல் கட்சியினரும், நிர்வாகிகளும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். சேலை, அண்டா குண்டா என பாத்திரங்களை வழங்கி தங்கள் பெருமையை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் இனி வரும் நாட்களில் இது போன்று விவசாய பெருங்குடி மக்களுக்கு உதவி செய்யும் வகையில் அரசியல் கட்சியினர் தலைவர்களின் பிறந்தநாட்களை கொண்டாடினால் அது ஆக்கப்பூர்வமானதாகவும், நெகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும்.