நளினிக்கு பரோல்: கழுத்தில் தூக்கு கயிரோடு காங்கிரஸ் நிர்வாகிகள்! தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்
தூத்துக்குடி: கோவில்பட்டியில் கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாகக் காங்கிரஸ் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள்.
அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசின் தீர்மானத்தின் மீது சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் கூட ஆளுநர் இதுவரை அதில் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை,

தீர்மானம்
முன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து 161 ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் எனக் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பிறகு 2018 செப்.9இல் 7 பேர் விடுதலை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், இதில் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

பரோல்
இதற்கிடையே பேரறிவாளனுக்கு உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரோல் வழங்க வேண்டும் எனப் பேரறிவாளனின் தாயார் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பேரறிவாளனுக்கு முதலில் கடந்த மே மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 7 முறை பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டது. அதேபோல மற்றொரு குற்றவாளியான நளினிக்கும் சமீபத்தில் 30 நாட்கள் பரோல் வழங்கியது தமிழக அரசு!

காங், போராட்டம்
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்குத் தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வரும் பரோல் மற்றும் சிறப்புச் சலுகைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு அவர்களைத் தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜீவ் காந்தி படுகொலையின் போது உயிர் நீத்த குடும்பங்களுக்குத் தமிழக அரசு ரூ 5 கோடியும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாயும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

கழுத்தில் தூக்கு கயிற்றுடன் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் அய்யலுசாமி, கயத்தார் முன்னாள் ஒன்றிய தலைவர் செல்லத்துரை ஆகியோர் கழுத்தில் தூக்கு கயிற்றுடன் இந்த தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று இருவரிடம் விசாரணை நடத்தினர். போராட்டத்தினை கைவிட வலியுறுத்தினர். ஆனால் இருவரும் கேட்கவில்லை என்பதால் மேற்கு காவல் நிலைய போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

காங். விளக்கம்
இதற்கிடையில் காந்தி மண்டபத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க தங்களிடம் முறையான அங்கீகாரம் பெறவில்லை என்றும். காந்தி மண்டபம் காங்கிரஸ் கட்சி சொத்து கிடையாது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக வெளியேறுமாறு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணைத் தலைவரும், காந்தி மண்டபத்தின் நிர்வாகியுமான திருப்பதிராஜா என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மண்டபத்தில் அனுமதி இல்லாமல் அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் திருப்பதிராஜா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications