திருச்செந்தூர் கோயிலில் பழம் கொடுக்க வந்தவரை மிதித்த கோயில் யானை தெய்வானை! பாகன் உள்பட 2 பேர் பலி
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை மிதித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாகன் மற்றும் அவரது உறவினர் என 2 பேரும் உயிரிழந்துள்ளனர். கோவில் யானை மிதித்ததாக இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டும் இன்று பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வந்து முருகன் அருளை பெற்று செல்கின்றனர். அறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடுகளில் ஒன்றாக இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் விளங்குகிறது.

அறுபடை வீடுகளிலே திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மட்டும் தான் கடற்கரை அருகே அமைந்துள்ளது. மற்ற ஐந்துபடை வீடுகளும் குன்றின் மீதே அமைந்துள்ளன. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு முருகப்பெருமான வணங்குவார்கள். இந்த கோவிலில் 25 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையின் பெயர் தெய்வானை.
விழா நேரத்தின் போது தெய்வானை யானை, பக்தர்களுக்கு ஆசி வழங்கும். பக்தர்களும் தெய்வானை யானைக்கு பழங்கள் மற்றும் காணிக்கையினை வழங்குவார்கள். முக்கிய விழா நிகழ்ச்சியின் போது அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும். இந்த யானையை பாகன் உதயகுமார் என்பவர் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. யானை தெய்வானை தினமும் கோவில் வளாகத்தில் உலா வரும்.
அப்போது தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும். அந்த வகையில் தான் இன்றும் தெய்வானை யானை திருச்செந்தூர் கோவில் வளாகத்தின் அருகே கொட்டகையில் நின்றுகொண்டிருந்தது. அப்போது மதியம் 3.30 மணியளவில் தெய்வானை யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றுள்ளார்.
அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் என்பவரும் இருந்துள்ளார். அப்போது திடீரென யானை அவர்களை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் படுகாயமடைந்துள்ளனர். சிசுபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த உதயகுமார் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யானை மிதித்ததாக இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிசுபாலன் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஆவார். உறவினரான பாகன் உதயகுமாருடன் இன்று அவர் முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையடுத்து திருச்செந்தூர் போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரித்தனர். இதேபோல் கோவில் நிர்வாகிகளும் அங்கு சென்றனர். முதற்கட்ட விசாரணையில், யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு என்ன நடந்தது? யானை ஏன் மிதித்தது? என்பது போன்ற தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை.
யானை கட்டப்பட்டு இருந்த கொட்டகையில் என்ன நடந்தது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் திருச்செந்தூர் கோவில் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications