''தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 30% வாக்குவங்கி''! அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி? சஸ்பென்ஸ் உடைத்த முருகன்
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் பாஜகவுக்கு 30% வாக்கு வங்கி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது என ஒரு காலத்தில் சிலர் பேசினார்கள் என்றும் இன்று கால் மட்டுமல்ல கையும் ஊன்றி ஆட்சிக்கு வரக்கூடிய வகையில் பாஜக பிரதான கட்சியாக திகழ்கிறது எனக் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்முருகன் இதனைக் கூறினார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணையுமா என்ற கேள்விக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பதிலளிக்காமல், கூட்டணிக் குறித்து தங்கள் கட்சியின் தேசியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள் என்றும் விரைவில் பாஜக கூட்டணி ஃபைனல் செய்யப்பட்டு கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள், யார் யார் இல்லை என்பதை அறிவிப்போம் என்றார். இதன் மூலம் இன்னுமே அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதை சூசகமாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
அதே போல் பாஜக கூட்டணியில் இணையும் கட்சி வேட்பாளர்களை தாமரைச் சின்னத்தில் போட்டியிடுமாறு நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கும், அவற்றையெல்லாம் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், தங்கள் கட்சியின் மேலிடத் தலைவர்களும் பார்த்துக்கொள்வார்கள் எனக் கூறி மேற்கொண்டு அந்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கும் என்றவர் பாஜகவுக்கு தமிழக மக்கள் மத்தியில் பேராதரவு பெருகி வருவதாக எல்முருகன் தெரிவித்தார்.
என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிகழ்வின் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி பன்மடங்கு உயர்ந்திருப்பதாகவும் பிரதமர் மோடி வருகையின் போது, பல்லடம் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட ஊர்களில் எந்தளவுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள் என்பதை பார்த்தாலே பாஜகவின் வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம் என்றார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சியா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நாட்டின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் செயல்பட்டிருப்பதால் அவர்கள் இருவரையும் பிரதமர் மோடி பாராட்டி நினைவுகூர்ந்து பேசியதாக புது விளக்கமும் அளித்தார்.












Click it and Unblock the Notifications