ஸ்டெர்லைட்டை இரண்டே மாதத்தில் திறப்போம்.. சிஇஓ ராம்நாத் அதிர்ச்சி பேட்டி!
பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவெடுத்து இருக்கிறோம் என்று ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி: பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவெடுத்து இருக்கிறோம் என்று ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இனி எப்போது வேண்டுமானாலும் இந்த ஆலை திறக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் இன்று சென்னையில் பேட்டியளித்தார்.

3 பேர் கமிட்டி
அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் 3 பேர் கொண்டு கமிட்டியை அமைத்து இருந்தது. அந்த கமிட்டி ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு நடத்தியது. மக்கள், அதிகாரிகள் பலரிடம் அந்த கமிட்டி விசாரணை செய்தது. அந்த கமிட்டியின் அறிக்கையின் பேரிலேயே எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. கமிட்டியின் அறிக்கையில் எங்களுக்கு எதிராக கருத்து இல்லை.

22 வருட சோதனை
எல்லா மாதமும் எங்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனை செய்கிறார்கள். 22 வருடமாக ஸ்டெர்லைட் ஆலையை சோதனை செய்து வருகிறார்கள். அப்போதெல்லாம் எந்த தவறும் எங்களிடம் இருப்பதாக கூறவில்லை. ஆனால் இப்போது சோதனையே செய்யவில்லை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. ஆனால் அந்த வாதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்றுக்கொள்ளவில்லை.

நிறைய பொருட்கள்
எங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் சில சில கழிவுகள் கூட, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத கழிவுகள்தான் என்பது உறுதியாகி உள்ளது. மூன்று விதமான பாதிப்பை ஏற்படுத்தாத கழிவுகள் எங்கள் நிறுவனத்தில் இருந்து வருகிறது. அதையும் கூட வேறு சில நிறுவனங்கள் கிளை பொருட்களை உருவாக்க வாங்கி கொள்கிறது.

திறக்க உள்ளோம்
பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முடிவில் உள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படும். எல்லோரின் முழு அனுமதியுடன்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க போகிறோம், என்று கூறியுள்ளார்.

2 மாதத்தில் திறப்போம்
ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதங்களில் திறக்க போகிறோம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இதற்கு அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான அனுமதி விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு சாதகமாக வந்துள்ளதால் அனுமதி கேட்டு இருக்கிறோம் என்றும் சிஇஓ ராம்நாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications