37 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல செய்தி.. திருச்செந்தூர் ராஜகோபுரத்தின் மேற்கு வாசல் திறக்கப்படுகிறதா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். மிகவும் புகழ் பெற்ற கோயிலான இங்கு தற்போது திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக 37 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் ராஜகோபுரத்தின் மேற்கு வாசல் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் பணிகள் முடிந்து விரைவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுவதே காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயில்களாக அறுபடை வீடுகள் உள்ளன. அறுபடைகளில் வீடுகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் இரண்டு கோயில்கள் என்றால் பழனியும், திருச்செந்தூரும் தான். அறுபடை வீடுகளை பொறுத்தவரை, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, பழனி என ஐந்து இடங்களுமே மலையில் உள்ளன. ஆனால் திருச்செந்தூர் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பல ஆயிரம் பக்தர்கள் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூரில் முருகனை தரிசிப்பது சவாலானது என்கிற அளவிற்கு கூட்டம் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்தபடி உள்ளதால், வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தொழிலதிபர் ஷிவ் நாடார் 200 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார். அவர் அளித்த பணத்தில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகமும் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அனைத்து கோயில்களிலும் ராஜகோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில் தான் அமைந்திருப்பது வழக்கம் ஆனால் திருச்செந்தூரில் கிழக்கு பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் இருக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள பிரமாண்டமான மேற்கு வாசல் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டது. முன்னதாக 1988 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த வழியாகத் தான் சென்று பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வந்துள்ளனர்.
அனால் முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட, இந்த கோபுர வாசல் உயரமாக இருப்பதால் தான் இந்த மேற்கு வாசல் எப்போதும் அடைக்கப்பட்டே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மேற்கு வாசலை பொறுத்தவரை, கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த நேரத்திலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
இதற்கிடையே கோயிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் கோயிலின் மேற்கு பிரமாண்ட மேற்கு வாசல் திறக்கப்படவுள்ளது. சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்த மேற்கு வாசல் கதவுகள் புதுப்பிக்கப்படுகிறதாம்.. இந்த மேற்கு வாசல் கதவுகள் மரத்தால் ஆனவை. இந்த கதவுகளில் யாரும் ஏற முடியாத வண்ணம் கூர்மையான இரும்புகள் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு இடைப்பட்ட பகுதிகளில் அம்மன், முருகன், பைரவர், கையில் அரிவாளுடன் சுடலைமாட சுவாமி, பத்ரகாளி, வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்கள் என நூற்றுக்கணக்கான கலைச்சிற்பங்கள் உள்ளன.
தற்போது திருச்செந்தூர் கோயில் மேற்கு வாசல் உள்ள பகுதியில் உள்ள மண்டப வாயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தொல்லியல் துறையின் ஆலோசனையின் படி சுண்ணாம்பை ஊற வைத்து அரைத்து அதன் மூலம் மிகவும் கலைநயமான முறையில் ஏற்கனவே இருந்த சிற்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படுகிறது. இதில் முனிவர்கள் அமர்ந்த நிலையிலும், பூத கணங்கள் தாங்குவது போன்றும் அமர்ந்திருப்பது போன்றும், ஆடுவது போன்றும் என பல சிற்பங்கள் உள்ளன. இந்நிலையில் 37 வருடங்களாக திறக்கப்படாத மேற்கு வாசல், புதுப்பிப்பு பணிகள் முடிந்த பிறகு, திறக்கப்படலாம் என்றும், அந்த வழியாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் உலா வருகின்றன. இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும்.












Click it and Unblock the Notifications