2 பெரிய பலன்.. தென்னகத்தின் கனவு திட்டம்! மதுரை-தூத்துக்குடி இரட்டை ரயில் பாதையை அர்ப்பணித்த மோடி
தூத்துக்குடி: மதுரை-தூத்துக்குடி இடையே 160 கிலோமீட்டர் தொலைவுக்கு இரட்டை வழித்தடமாக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்மூலம் தென்மாவட்ட மக்களுக்கு 2 முக்கியமான பலன்கள் கிடைக்க உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். திருச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை 10.15 மணிக்கு பிரதமர் மோடி வந்திறங்கினார். ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதலில் அவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு ரூ1,100 கோடியிலான திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததோடு, தமிழகத்தில் ரூ.20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதில் ஒரு திட்டம் தான் தென்மாவட்ட மக்களின் கனவு திட்டமான மதுரை-தூத்துக்குடி இரட்டை வழித்தட ரயில் பாதையாகும். மதுரை-தூத்துக்குடி இடையே ரூ.1,890 கோடி மதிப்பிட்டில் இரட்டை வழித்தடத்துக்கான ரயில் பாதை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு தொடங்கியது. இந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது. தற்போது பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி மதுரை-தூத்துக்குடி இரட்டை வழித்தடமாக்கப்பட்ட ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மதுரையில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவுக்கு தூத்துக்குடி வரை ரயில் பாதை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி மதுரை-தூத்துக்குடி இடையே ஒற்றை வழித்தடம் தான் இருந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ஒரு ரயில் வரும்போது இன்னொரு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் கிராசிங்கிற்காக நிற்க வேண்டும்.

தற்போது இரட்டை வழித்தடமாக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் நின்று செல்ல வேண்டிய சூழல் இருக்காது. இதன்மூலம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் இருந்து திருநெல்வேலி வழியாக ம் தமிழகத்தின் பிற இடங்களுக்கு இயங்கும் ரயில்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து இந்த வழித்தடத்தில் தென்மாவட்டங்களுக்கு இயங்கும் ரயில்களின் பயண நேரம் என்பது சற்றும் குறையும்.
மேலும் ஒற்றை ரயில்பாதை காரணமாக இந்த மார்க்கத்தில் அதிகமான ரயில்கள் என்பது இயக்கப்படாத சூழல் இருந்தது. தற்போது மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை இரட்டை வழித்தடமாக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் சிறப்பு ரயில்கள், கூடுதல் ரயில்கள் மக்களின் வசதிக்காக இயக்கப்படும். இதுதவிர திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரியில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களாக உள்ள சென்னை, கோவை, மும்பை, பெங்களூர் உள்பட பிற ஊர்களுக்கும் ரயில்கள் அதிகளவில் இயக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன்மூலம் தென்மாவட்ட மக்களுக்கு இந்த திட்டம் என்பது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications