ஏழை பெண்களின் வங்கி கணக்கில் வந்து விழப்போகும் 1600 ரூபாய்.. தமிழக அரசின் உதவி யாருக்கு கிடைக்கும்?
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார். இதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் தலா 100 பயனாளிகள் வீதம் 700 பயனாளிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்படி தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் வங்கி கணக்கில் 1600 ரூபாய் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பெண்கள் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை பெண்கள் பல்வேறு தொழில்களை கற்று, அந்த தொழிலை மேற்கொள்ள மானியத்துடன் கடனும் தருகிறது. அந்த வகையில் ள ஏழை பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக 2024-25-ம் நிதி ஆண்டில் ஒன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் வீதம் 38,700 ஏழ்மை நிலையில் உள்ள கணவரை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டு கோழிக்குஞ்சுகள் (ஒருவருக்கு 40 கோழிக்குஞ்சுகள்) 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் தலா 100 பயனாளிகள் வீதம் 700 பயனாளிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளி ஏழ்மை நிலையில் உள்ள பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களில் பயனடைந்தவராக இருக்க கூடாது.
மேலும் தேர்வு செய்யப்படும் பயனாளி ரூ.3,200 சொந்த செலவில் நாட்டு கோழிக்குஞ்சுகள் கொள்முதல் செய்திடும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். நாட்டு கோழிக்குஞ்சுகள் கொள்முதல் செய்து, அதற்கான சுயசான்றுடன் கூடிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50 சதவீத மானிய தொகை ரூ.1,600 அவருடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ள பெண்கள் அருகே உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம்" இவ்வாறு வேலூர் கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications