ஆம்பூரில் பணம் பட்டுவாடா... அதிகாரிகள் வந்ததால் சாலையில் ரூ.13 லட்சத்தை வீசிவிட்டு ஓட்டம்
வேலூர்: ஆம்பூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வந்ததால், ரூ.13 லட்சத்தை சாலையில வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பணம் விநியோகத்தை தடுக்க தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் வருவதை அறிந்ததும் பல இடங்களில் பணம் விநியோகிப்பவர்கள் முன்கூட்டியே அறிந்து தப்பி ஓடிவிடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடந்துள்ளது.
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரில் ஒரு கும்பல் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு ஆய்வு நடத்த அதிகாரிகள் விரைந்தனர்.
இதனை அறிந்த அந்த கும்பல், அதிகாரிகள் பக்கத்தில் வந்துவிட்டதை அறிந்து, அப்படியே கையில் வைத்திருந்த ரூ.13 லட்சத்தை சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதனால் சாலையில் கிடந்த 13லட்சத்தை கைப்பற்றிய போலீசார் இந்த பணத்தை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். அதிகாரிகளுக்கு பயந்து 13 லட்சத்தை சாலையில் வீசிசென்ற சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.