வேலூரில் சோகம்.. மாயமான 3 வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு! கதறி அழுத பெற்றோர்
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகி இருந்தது. குழந்தையைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், அங்கு அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

3 வயது சிறுமி மாயம்:
வேலூரை அடுத்துள்ள குடியாத்தம் தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த விவசாயி தரணி. இவருக்கும் பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும் 3 வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை 3 வயதே ஆன அந்த பெண் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது.
வீட்டிற்கு முன்பு தான் என்பதாலும் வழக்கமாக விளையாடும் இடம் தான் என்பதாலும் குழந்தையின் தாயார் வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தார். இருப்பினும், கொஞ்ச நேரமாகக் குழந்தையின் சத்தம் வராததால், அவர் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போய் இருந்ததைப் பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தனது கணவருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
போலீஸ் நிலையத்தில் புகார்:
இதையடுத்து கணவரும் மனைவியும் தங்கள் குழந்தையை அருகே உள்ள இடங்களில் தேடியுள்ளனர். மேலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடி அலைந்துள்ளனர். இருப்பினும், பெண் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் இது தொடர்பாக குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த குடியாத்தம் தாலுகா போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். முதலில் குழந்தை கடத்தப்பட்டதா அல்லது விளையாட்டுத்தனமாக எங்கேயாவது சென்றுவிட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு குழந்தை மாயமான சூழலில், தொடர்ந்து குழந்தையைத் தேடும் பணிகள் நடந்து வந்தது.
சடலமாக மீட்பு:
இதற்கிடையே மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன மூன்று வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின் அருகே பாழடைந்த கிணறு இருந்த நிலையில், அங்கிருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கிணற்றில் குழந்தையின் உடல் மிதந்த நிலையில், அதை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் உடலைப் பார்த்த பெற்றோர், கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
குடியாத்தம் போலீசார் விசாரணை
இதையடுத்து 3 வயதுக் குழந்தையின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை வழி தவறி கிணற்றில் விழுந்துவிட்டதா.. இல்லை இதில் வேறு எதாவது குற்றச் சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications