வேலூர் கோட்டையில் இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற கூறி அட்டூழியம்.. கைதான 6 பேருக்கு 15 நாள் சிறை
வேலூர்: வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்னதாக எழுந்த புகாரின் பேரில் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது 6 பேரை 15 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் கோட்டை விஜயநகர பேரரசால் உருவாக்கப்பட்டதாகும். இந்த கோட்டையை சுற்றிய அகழி மற்றும் கல் கட்டுமானங்களுக்கு இந்த கோட்டை பெயர் பெற்றது. சுமார் 133 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது.
191 அடி அகலும் 29 அடி ஆழமும் கொண்ட அகழியும் கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. இந்த கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் தேவாலயம், பள்ளிவாசல், அருங்காட்சியகம் உள்ளிட்டவை உள்ளன.

அகழி
இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர் கோட்டைதான். இந்த கோட்டையின் 3 பக்கங்களில் மட்டுமே தண்ணீர் இருக்கும். கிழக்கு பக்கத்தில் நுழைவுவாயில் உள்ளது. இந்த கோட்டையில்தான் திப்பு சுல்தான் சிறை வைக்கப்பட்டிருந்தார். அது போல் ஸ்ரீரங்கராயனின் குடும்பத்தினரும் கொல்லப்பட்டது இந்த கோட்டையில்தான். இந்த கோட்டை நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும் மராட்டியருக்கும் அவர்களை தொடர்ந்து கர்நாடகா நவாப்புகளுக்கும் கைமாறியது. கடைசியாக ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை பராமரித்து வந்தனர்.

வரலாற்றுச் சின்னம்
இந்த கோட்டை வரலாற்று சின்னமாகும். வரலாறை படித்துவிட்டு இந்த கோட்டைக்குள் சென்றால் உடல் மெய் சிலிர்க்கும். அந்த அளவுக்கு இந்த கோட்டை கம்பீரமாக இருக்கும். இந்த வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. அது போல் உள்ளூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாகவும் இது உள்ளது.

வார இறுதி நாட்கள்
சென்னையில் மாலை வேளைகளிலும் வார இறுதி நாட்களிலும் கடற்கரைக்கு செல்வதை போல் வேலூர் மக்கள் மாலை வேளைகளில் கோட்டை புல் தரையில் அமர்ந்து பொழுதை கழிப்பர். உள்ளூர் மக்கள் வருவதை போல் காதலர்களும் இந்த கோட்டைக்கு வருவதுண்டு. ஏதாவது சந்து பொந்துகளில் அமர்ந்து கொண்டிருப்பர். மேலும் கல்லூரிகளை கட் அடித்து விட்டு பள்ளியை கட் அடித்துவிட்டும் சிலர் வருவதுண்டு.

வேலூர் கோட்டைக்கு வந்த இஸ்லாமிய பெண்கள்
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி வேலூர் கோட்டைக்கு சில இஸ்லாமிய பெண்கள் தங்களது ஆண் நண்பர்களுடன் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் அவர்களை வீடியோ எடுப்பதை பார்த்து அந்த ஆண் நண்பர்கள் கேள்வி எழுப்பினர். உடனே வீடியோ எடுத்தவர்கள் அந்த பெண்ணிடம் ஹிஜாபை அகற்றுமாறு வலியுறுத்தினர்.

காதல் ஜோடிகள்
மேலும் இந்து இளைஞர்களுடன் உங்கள் காதல் என்ன என கேட்டதாகவும் தெரிகிறது. இதே போல் ஹிஜாப் அணிந்த ஜோடிகளாக பார்த்து பார்த்து இவர்கள் வீடியோ எடுப்பதும், ஹிஜாப்பை அகற்றுமாறு கூறுவதுமாக இருந்தனர். இதையடுத்து பிரச்சினை ஏற்படாமல் இருக்க காதல் ஜோடிகள் அந்த இடத்தை விட்டு புறப்பட்டனர். இந்த வீடியோக்கள் வைரலாகின.

வேலூர் போலீஸார்
இதையடுத்து இந்த விவகாரம் வேலூர் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து விசாரணையின் பேரில் பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதால் மற்ற 6 பேரையும் வேலூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் 6 பேரையும் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு வேலூர் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஆண் நண்பர்களுடன் கோட்டை வந்த இஸ்லாமிய பெண்களை யாரோ சிலர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஜாப் விவகாரம்
கர்நாடகா மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை இந்துத்துவா அமைப்பினர் அனுமதி மறுத்தது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது வேலூர் கோட்டையில் ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவரவர் விரும்பும் மதங்களை பின்பற்றலாம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கும் போதிலும் சில இடங்களில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன.












Click it and Unblock the Notifications