வேலூரில் ரூ.1,692க்கு ஆசைப்பட்டு ரூ.35 ஆயிரத்தை இழந்த பிரபல ஜவுளி நிறுவனம் .. என்ன நடந்தது?
வேலூர்: கடந்தாண்டு ஜூலை மாதம் வேலூர் காட்பாடியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் புதிய துணிகள் எடுப்பதற்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார் துர்கா தேவி. இவர் துணிகள் எடுத்த பின்னர் அதற்கான பில் தொகை ரூ.1,692-ஐ துர்காதேவி தனது செல்போன் யு.பி.ஐ. மூலம் ஜவுளிக்கடையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் பணம் போகவில்லை என இருமுறை வாங்கியிருக்கிறது ஜவுளி நிறுவனம்.
கூடுதலாக அனுப்பிய பில்தொகை ரூ.1,692-ஐ திருப்பி கொடுக்காத ஜவுளிக்கடைக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஜவுளி கடை, ரயில்வே, வங்கி, போக்குவரத்து, பெட்ரோல் பங்க், நிதி நிறுவனம் என சேவை அளிக்கும் எந்த நிறுவனங்கள் மீது வேண்டுமானாலும் சேவை குறைபாடு தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் அளித்து சேவை குறைபாட்டிற்காக நிவாரணம் பெற முடியும்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த செஞ்சி பகுதியை சேர்ந்த துர்கா தேவி என்பவர் கடந்தாண்டு ஜூலை மாதம் காட்பாடியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் புதிய துணிகள் எடுப்பதற்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அங்கு துர்கா தேவி தேவையான துணிகள் எடுத்துள்ளார். பின்னர் அதற்கான பில் தொகை ரூ.1,692-ஐ தனது செல்போன் யு.பி.ஐ. மூலம் ஜவுளிக்கடையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் பணம் வரவில்லை என்று ஜவுளிக்கடை ஊழியர்கள் கூறி உள்ளனர். துர்காதேவி தனது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது போன்று செல்போன் ஆப்பில் காண்பிப்பதாக தெரிவித்தார்.
அதற்கு ஜவுளிக்கடை ஊழியர்கள், வங்கியின் சர்வர் பிரச்சினை காரணமாக பணம் வரவில்லை என்றும், மீண்டும் ஒருமுறை பில் தொகையை அனுப்பும் படியும் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து அவர் மீண்டும் ஒருமுறை ரூ.1,692-ஐ ஜவுளிக்கடையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். அதற்கு மறுநாள் துர்காதேவி காட்பாடியில் உள்ள வங்கிக்கு சென்று அவரின் வங்கி கணக்கை சரிபார்த்த போது 2 முறை ரூ.1,692 எடுக்கப்பட்டதை கண்டார்.
இதையடுத்து துர்கா தேவி அந்த ஜவுளிக்கடைக்கு சென்று இதுபற்றி முறையிட்டார். அதற்கு அவர்கள் அந்த பணத்தை டி.டி. எடுத்து முகவரிக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்துக்கான டி.டி.யை அனுப்பவில்லை. அதனால் துர்காதேவி வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நுகர்வோர் கோர்ட் உறுப்பினர்கள் அஸ்கர் கான், அசினா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம், வங்கி கணக்கிற்கு வந்த கூடுதல் பில் தொகையான ரூ.1,692-ஐ வாடிக்கையாளருக்கு திருப்பி கொடுக்காத ஜவுளிக்கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் வழக்கை நடத்தியதற்கான செலவு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை துர்கா தேவிக்கு வழங்க உத்தரவிட்டார். இதன் மூலம் ரூ.1,692-ஐ திருப்பி கொடுக்காத ஜவுளிக்கடைக்கு ரூ.35 ஆயிரம் இப்போது பறிபோயிருக்கிறது.












Click it and Unblock the Notifications