மாப்பிள்ளை தேடுகிறார் தமன்னா... கட்டிக்க ரெடியா.. வேலூரில் கலகல
Recommended Video
வேலூர்: மாப்பிள்ளை இருந்தால் பார்த்து சொல்லுங்கள் என நடிகை தமன்னா பொதுமக்கள் மற்றும் நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார்.
பிரபல நகைக்கடை நிறுவனமான மலபார் கோல்டு நிறுவனத்தின் புதிய கிளை துவக்க விழா வேலூரில் இன்று நடைபெற்றது. வேலூர் அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள மலபார் கோல்டு நகை கடையை திறந்து வைக்க நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி இன்று பகல் 12 மணியளவில் நடிகை தமன்னா வேலூர் மலபார் கோல்டு நகைக் கடைக்கு வருகை புரிந்தார். முன்னதாக தமன்னாவை பார்ப்பதற்காக அவர் வரும் தகவல் அறிந்து வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மலபார் கோல்டு நகை கடை முன்பு கூடி இருந்தனர்.
மலபார் கோல்டு கடை
காலை 11 மணிக்கு தமன்னா வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 9 மணிக்கெல்லாம் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மலபார் கோல்டு நகை கடை முன்பு கூடி நின்றனர்.
கையசைத்த தமன்னா
தமன்னா வந்தவுடன் நகைக்கடை முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கையசைத்தபடி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து அவர் மலபார் கோல்டு நிறுவனத்தின் புதிய கிளையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
குடும்ப நிகழ்ச்சி
பின்னர் முதல் மாடிக்கு சென்று நகைக்கடையில் பார்வையிட்டு அங்குள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் பேசிக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மலபார் நகை கடை எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு நகைக்கடை ஆகும். இதை எனது குடும்ப நிகழ்ச்சியை போல் நான் உணர்கிறேன்.
அரசியல் சுத்தமாக தெரியாது
மிகவும் தரமான நகைகளை பொதுமக்களுக்கு மலபார் கோல்டு நிறுவனம் வழங்கி வருகிறது என்றார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமன்னா, " எனக்கு அரசியல் பற்றி சுத்தமாக எதுவும் தெரியாது என்றார்.
விழிப்புணர்வு
தொடர்ந்து திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய போது நீங்களே மாப்பிள்ளை இருந்தால் பார்த்து சொல்லுங்கள் என தமாஷாக பேசிக் கொண்டு சென்றார் அப்போது அங்கு வந்த வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மைதிலி, தமன்னாவிடம், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் இரண்டு நிமிடம் விழிப்புணர்வாக பேசும்படி கோரிக்கை வைத்தார்.
நன்றி
அதை ஏற்று வெளியே வந்த தமன்னா மேடையில் ஏறி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர் இந்த வேலூர் நகரத்துக்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் அன்பிற்கு என்ன வார்த்தை சொல்வது என்றே தெரியவில்லை. குறிப்பாக போலீஸார் நான் வருவதையொட்டி நீண்ட நேரமாக இந்த பாதுகாப்புப் பணியில் வெயிலைக் கூட பார்க்காமல் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கோரிக்கை
இங்கே ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து உங்களிடம் பேசுமாறு கூறினார். அது மிகவும் அவசியமான ஒன்றுதான். எனவே அனைவரும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்தபடியும், பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்து கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்து கூறிய தமன்னா
நீங்கள் எனக்கு பிடித்த ரசிகர்கள் ஐ லவ் யூ. என் பேச்சை கேட்பீர்கள் என நம்புகிறேன் என ரசிகர்களை குளிர வைக்கும்படி பேசினார். தொடர்ந்து அவர் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
கனத்த இதயம்
நடிகை தமன்னாவின் வருகையால் வேலூர் அண்ணா சாலையில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தமன்னா பேசிய பேச்சை மனதில் சுமந்து கொண்டு கனத்த இதயத்துடன் இளைஞர்களும் நகர்ந்தனர்.