"அதிமுக வேட்பாளர் இவர்தான்".. கூட்டத்தில் தன்னிச்சையாக அறிவித்த முன்னாள் எம்.எல்.ஏ.. வேலூர் சலசலப்பு
வேலுர்: இன்னும் சட்டசபை தேர்தலுக்கு பல மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே வெற்றி வேட்பாளர் என ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அதிமுக எம்.எல்.ஏ பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தலில் நின்ற வேட்பாளரே மீண்டும் போட்டியிடுவார் என முன்னாள் எம்.எல்.ஏ சூசகமாகப் பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சியில் அதிமுகவின் பாக கிளை நிர்வாகிகள் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்ட செயலாளர் வேலழகன் முன்னிலையில், முன்னாள் எம்எல்ஏவும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான லோகநாதன் பேசினார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ லோகநாதன் இந்தக் கூட்டத்தில் பேசும்போது, "வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ராமு" எனக் கூறி அவரது பதவிகளை பட்டியலிட்டு பேசினார்.
அதிமுக வேட்பாளர்
அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேட்பாளரை அறிவிப்பதே நடைமுறை. தேர்தல் நெருக்கத்தில் தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்நிலையில் மாவட்ட செயலாளரை மேடையில் வைத்துக் கொண்டே, பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதியின் வெற்றி வேட்பாளர் என்று முன்னாள் எம்எல்ஏ பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வெற்றி வேட்பாளர் என குறிப்பிட்டு பேசியதை அதிமுக மாவட்ட செயலாளரும், மற்ற நிர்வாகிகளும் கண்டிக்காதது குறித்தும் கட்சியினர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
யார் இந்த ராமு?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொண்ட சமுத்திரம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமு. பி.இ. கெமிக்கல் இஞ்சினியரிங் முடித்துள்ள இவர், மூன்று முறை ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். பொதுமக்களுடன் நெருங்கிப் பழகுவதில் கெட்டிக்காரர். இதனாலேயே இவருக்கு கட்சியை கடந்தும் ஆதரவு பெருகியது.
இவர் குறித்த தகவல் ஜெயலலிதா வரை சென்றதால், ராமுவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் 2015 ஆம் ஆண்டில் தேடி வந்தது. ஓராண்டு காலம் மாவட்டச் செயலாளராக இருந்த அவர் மீண்டும் ஒன்றியச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து பணியாற்றி அரசியலில் தனக்கான ஆதரவாளர்கள் வட்டத்தை விரிவாக்கிக் கொண்டார்.
துரைமுருகனுக்கு எதிராக
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும் பணியாற்றிய ராமு, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சீனியரான துரைமுருகனை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார். தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி இறுதி வரை துரைமுருகனுக்கு கடும் போட்டி கொடுத்தார்.
வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனிடம் ராமு வெற்றியை பறி கொடுத்தாலும், வாக்கு எண்ணிக்கையின் பல சுற்றுகளில் முன்னிலையில் இருந்தார். திமுகவின் மிக முக்கிய சீனியரான துரைமுருகனையே வாக்கு எண்ணிக்கையின் போது தண்ணீர் குடிக்க வைத்து வெற்றிக்கு நெருக்கமாக அவர் வந்தது பெரும் பேசுபொருளாகி இருந்தது.












Click it and Unblock the Notifications