டே பரமா படிடா..பெண்களை வன்கொடுமை செய்ய தவெக ஆதரவாம்! #westandforwomenharassment பேனரை பார்த்து ஷாக்
வேலூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை கண்டித்து விஜய்யும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் we stand against women harassment என்பதற்கு பதிலாக we stand for women harassment என்ன அச்சிடப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருப்பது சமூக வளைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயது உட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய். அந்த வீடியோவில்," உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்ல ஆசை தான். ஆனால் பாதுகாப்பே இல்லாமல் எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்வது. நாம் அனைவரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இந்த அரசை 2026ல் வீட்டுக்கு அனுப்புவோம்" என பேசி இருந்தார்.
முதன் முறையாக திமுக என நேரடியாக விஜய் விமர்சித்து பேசி இருந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இதை அடுத்து பாலியல் குற்றங்களை தடுக்கவும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கைதுக்கு கண்டனம் தெரிவித்த விஜய், தங்களுக்கான உரிமையை கேட்டு பெற வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் அறவழியில் போராடியது. ஆனால் தங்களின் தேவைகளுக்கு கூட போராடக் கூடாது என்று அராஜக உணர்வுடன் திமுக அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்" என அறிக்கையும் வெளியிட்டார்.
விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து நலத்திட்ட உதவிகள் ஊர்வலம், என சாதாரண அரசியல் செய்து வந்த அந்த கட்சியினர் முதல் முறையாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது பேசு பொருளாக மாறியது. அதே நேரத்தில் சில சிறு சிறு பிரச்சனைகளில் சிக்கவும் நேர்ந்தது. தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துவிட்டு தமிழ் கூட தெரியாதா என சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் விமர்சிக்கப்படுகின்றனர்.
வேலூரில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் வைக்கப்பட்டிருந்த பேனரில் 'தவறிய' என்பதற்கு பதிலாக 'தவரிய' என்றும், 'கண்டித்து' என்பதற்கு பதிலாக 'கன்டித்து' என எழுத்துப் பிழைகள் இருந்தது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. ஒரு பிழை இல்லாமல் பேனர் கூட அடிக்க முடியாதா? என நெட்டிசன்கள் விமர்சித்தனர். ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என தமிழக வெற்றிக் கழகத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் பழைய திமுக பேனர்களை தோண்டி எடுத்து அதனை பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் வைத்த பேனர் தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. we stand against women harassment என்பதற்கு பதிலாக we stand for women harassment என ஆங்கில வாசகத்தோடு வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருக்கின்றனர்.
அதில் கையெழுத்திட வேண்டும் எனவும் பெண்களிடம் கோரிக்கை விடுத்தனர். சில படித்த பெண்கள் அதனை படித்து பார்த்துவிட்டு we stand against women harassment என்றால் தான் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் என்று அர்த்தம். we stand for women harassment என நீங்கள் பேனர் வைத்திருப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்பது போல இருக்கிறது என கூறி கையெழுத்திட மறுத்துவிட்டனர். தற்போது இந்த பேனர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.












Click it and Unblock the Notifications