நாம இப்டியே இருக்கக்கூடாது.. புதுசா ஏதாச்சும் பண்ணனும் - பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்
வேலூர்: பாஜகவினர் பழைய நிலையிலேயே இருக்கக்கூடாது என்றும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருக்கிறார்.

வேலூர் மாவட்டம் அரப்பாக்கம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத் தலைவர் நரேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை எவ்வாறு அணுக வேண்டும்? என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சி பழைய நிலையிலேயே இருக்கக்கூடாது. மாறுபட்டு வரவேண்டும். கிராமங்களில் பாஜகவை கொண்டு சேர்த்து கிளைகளை அமைத்து வலுப்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து கூறி அவர்களை பயனடைய செய்ய வேண்டும்." என்று அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நாளை இந்த மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசு மீதான விமர்சனங்களை அதிகளவில் எழுப்பி ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பாஜக பிரபலமாகி வருகிறது.
பாஜக பிரமுகர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களும் மக்கள் மத்தியில் அக்கட்சி குறித்த விவாதத்தை எழுப்புகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு பாஜகவின் அடுத்த குறி தமிழ்நாடு என்று அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.
ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறியது போன்றவை இன்னும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் பாஜக ஆட்சியிலிருப்பது கூடுதல் பலமாக இருப்பதால் தமிழ்நாட்டில் அக்கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் பணிகளில் இறங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications