ருசியா இருக்கா..நல்லா சாப்பிடுங்க.. பள்ளி மாணவர்களுக்கு உப்புமா பரிமாறிய முதல்வர்..வேலூரில் கள ஆய்வு
அலமேலுமங்காபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் காலை உணவு பரிமாறினார்.
வேலூர்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறினார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் அதிகாலை முதலே தனது பணியை உற்சாகமாக ஆரம்பித்துள்ளார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக வேலூர் மாவட்டம் சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 196 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,351 புதிய வகுப்பறைகள் கட்டும் திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோல் தொழிலதிபர்கள், விவசாயிகள், வணிகர்கள், பேருந்து, லாரி உரிமையாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து முதல்வர் தலைமையில் வேலூர் சரக மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு ஆய்வு நடைபெற்றது.
வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு தங்கிய முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாலையில் உற்சாகமாக ஆய்விற்கு கிளம்பினார். சத்துவாச்சாரி ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், காலை சிற்றுண்டியின் தரத்தை ஆய்வு செய்தார்.
அங்கிருந்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, சாம்பார் பரிமாறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினும் உப்புமா, சாம்பார் சாப்பிட்டு பார்த்து உணவின் ருசி..தரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டதோடு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சமைக்க வேண்டும் மாணவர்களுக்கு அன்புடன் பரிமாற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். இதில், அமைச்சர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டுக்குச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதிய உணவுக்குப் பிறகு ரயில் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.
கள ஆய்வு திட்டத்தின் மூலம் நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து அரசின் திட்டங்கள் எளிதாக மக்களை சென்றடைகிறாதா என்பதை கேட்டறிந்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். மாவட்டம் தோறும் இந்த ஆய்வு திட்டத்தினை செயல்படுத்த உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.