குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல! அதிகாரிகளின் பதற்றத்தை தணித்த ஸ்டாலின்!
ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளின் பதற்றத்தை தணித்த முதல்வர் ஸ்டாலின்
வேலூர்: ஏதோ குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தாம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவில்லை என அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும்; தொய்வுகளை நீக்க வேண்டும் என்பது மட்டுமே தமது நோக்கம் என முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
முதலில் முதல்வர் என்னவெல்லாம் கேட்பாரோ, குறைகளை சுட்டிக்காட்டி கடிந்துகொள்வாரோ என பதற்றத்துடன் அமர்ந்திருந்த அதிகாரிகள் பின்னர் ஒரு வழியாக பதற்றத்தை தணித்துக் கொண்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு;
பணம் வீணாகக் கூடாது..பட்ஜெட்டுக்கு முன் விரைவாக முடிங்க..அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
குறை கண்டுபிடிக்க அல்ல
இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல, இதனுடைய நோக்கம் அது அல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதித்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். சுணக்கம் காணப்படக்கூடிய சில பணிகள் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது. அதை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். விரைவிலே நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கையையும் சொல்லியிருக்கிறீர்கள். அதை செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடத்தில் இருக்கிறது.
தொய்வுகள் நீங்க வேண்டும்
நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும்; தொய்வுகளை நீக்க வேண்டும். நம்முடைய பணிகளில் காணக்கூடிய இடர்களையெல்லாம் குறைக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். உங்களை உற்சாகப்படுத்துவதற்கும் - உங்கள் பிரச்சனையை நேரடியாக அறிவதற்கும் தான் இந்த ஆய்வுக் கூட்டம். உங்களுடைய கருத்துக்களையெல்லாம் அரசினுடைய கவனத்தில் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
உங்களுக்கு நன்றி
கடந்த 20 மாத காலத்தில் நாம் ஆட்சிக்கு வந்து, எத்தனையோ திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம். அப்படி தீட்டிய திட்டங்களில் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பணிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். இதெல்லாம் உங்களுடைய ஒத்துழைப்பால்தான், உங்களுடைய செயல்திறத்தால் தான் அதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். அதற்காக முதலில் என்னுடைய நன்றியை உங்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஒத்துழைப்பை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும், இன்னும் வேகமாக வழங்க வேண்டும்.
பற்றாக்குறை இருந்தால்
இந்த களப்பணி மற்றும் ஆய்வுக் கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு துறை தலைவர்களும் அரசு செயலர்களும் உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கான திருத்த ஆணை வெளியிடலாம். நிதி தேவை அல்லது பணியாளர் பற்றாக்குறை இருந்தால் அதைச் சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செயலாளர்களையும், துறைத் தலைவர்களையும் இதைத்தான் நான் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
வழக்கமாக தலைமைச் செயலகத்தில்
வழக்கமாக தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்களைத் தான் நான் சந்திப்பேன். அதோடு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால் அதைவிட இப்படி அடுத்தகட்ட அலுவலர்களோடு அந்த மண்டலத்திற்கே வந்து கலந்துரையாட வேண்டும் என்று முடிவு செய்து, அந்தப் பணியை இப்போது நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறோம்.