வேலூர் அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்.. பரிதவித்த பார்வையற்ற தம்பதிக்காக அதிரடி நடவடிக்கை
வேலூர்: வேலூரில் அரசு பேருந்தில் இருந்து பார்வையற்ற தம்பதி தவறி விழுந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் ஆதங்கத்துடன் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குறிப்பிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவுக்கு அருகே திப்பசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் பார்வை மாற்றுத்திறனாளி ஆவார். இவரின் மனைவி விசாலாட்சியும் பார்வை மாற்றுத்திறனாளி ஆவார். தம்பதி இருவருமே பார்வையற்றவர்கள் என்பதால், இவர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாகப் பயணம் மேற்கொள்வதற்காக சமூக நலத்துறையால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயண அட்டையை வைத்து இருவரும் அடிக்கடி அரசுப் பேருந்துகளில் ஏறுவார்கள். வேலூருக்கு வேலை நிமித்தமாக வந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

ராமதாஸ் மற்றும் விசாலாட்சி தம்பதி, வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் சென்றுள்ளனர். அங்கு அரசுப் பேருந்தில் ஏறி பள்ளிகொண்டா நோக்கிப் பயணித்துள்ளார்கள். சென்னையில் இருந்து வேலூர் வழியாக திருப்பத்தூர் சென்ற TN-23 N 2752' பதிவெண் கொண்ட அரசுப் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.
பேருந்தில் , பார்வை மாற்றுத்திறனாளிகளை கண்டக்டர், வேண்டா வெறுப்பாக ஏற்றிக்கொண்டாராம். அதேநேரம் பேருந்தில் ஏறிய அவர்களை மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் அமர வைக்கவும் உதவி செய்யவில்லையாம்.. அப்போது, இருக்கையில் அமர்ந்திருந்த முகம் தெரியாத பயணிகள் இருவர் எழுந்து நின்று இவர்கள் அமர இடம் கொடுத்து உதவினார்களாம். இதனிடையே பள்ளிகொண்டா நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, பார்வையற்ற தம்பதியரும் தட்டுத் தடுமாறி எழுந்து இறங்க முயன்றுள்ளார்கள்..
இறங்கும்போதுகூட கண்டக்டர் உதவி செய்யவில்லையாம். படியை கவனித்து இறங்குவதற்குள் பேருந்தை ஓட்டநர் சட்டென இயக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், பார்வையற்றவரான விசாலாட்சி தடுமாறி கீழே விழுந்தாராம். இதைப் பார்த்த பொதுமக்கள் பதறிப்போய் ஓடி வந்து இருவரையும் தூக்கிவிட்டுள்ளார்கள். நல்லவேளையாக லேசான சிராய்ப்பு காயங்களுடன் நூலிழையில் விசாலாட்சி உயிர் தப்பினார்.
வேலூர் பார்வை மாற்றுத்திறனாளி ராமதாஸ் தம்பதி.. அரசு பேருந்தில் நடந்த அவலம்.. நெட்டிசன்கள் ஆவேசம்
இது குறித்துப் பேசிய பார்வை மாற்றுத்திறனாளி ராமதாஸ், " எங்களை வண்டியை ஆட்டி ஆட்டி கீழே தள்ளிட்டாங்க. ஆனால், ஏதாவது எங்களுக்கு ஆச்சுன்னா என்ன செய்வது? எத்தனை முறை வந்தால் இவர்களுக்கென்ன? இறங்குவதற்கு முன்னால் பேருந்தை இயக்குறாங்க.. நாங்கள் வேலூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து வருகிறோம்.. எங்களிடம் கண்டக்டர் ஏன் இரண்டு பேரும் எப்போதும் இதுலையே வர்றீங்க என்று கேட்டார். பொதுவாகவே எங்களை பேருந்துகளில் ஏற்றுவது இல்லை.. அதையும் மீறி ஏற முயன்றாலும் சீட் இல்லை என்று கூறுவார்கள்.. எனினும் நாங்கள் சீட்டு கேட்பது இல்லை.. பரவாயில்லை ஏதோ ஏற்றி சொல்கிறார்களே என்று நினைத்து விட்டுவிடுவோம்...
அதேநேரம் ஒரு சில அரசு பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனர்கள் எங்களை கூப்பிட்டு ஏற்றி செல்வார்கள். அதிலும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள்.. நாங்கள் வந்த இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிக்கு என ஒதுக்கப்பட்ட சீட்டில் பிற சாதாரண பயணிகளே அமர்ந்திருந்தனர். அதை நாங்கள் கேட்டாலும் கொடுப்பது இல்லை.. நாங்கள் இறங்கும் போது, உடனே வண்டியை எடுத்துவிட்டார்கள்.. மனைவி இதில் கீழே விழுந்துவிட்டார். நல்லவேளையாக அடிபடவில்லை என்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணை நடத்திய போக்குவரத்துறையின் வேலூர் மண்டல பொதுமேலாளர் கணபதி, பேருந்து ஓட்டுநர் செந்தில், கண்டக்டர் பிரபு ஆகிய இருவரையும் சஸ்பெண்ட்’ செய்து, உத்தரவிட்டுள்ளார்












Click it and Unblock the Notifications