தமிழக அரசின் அதிரடி உத்தரவு.. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை
Recommended Video
வேலூர்: தமிழக அரசின் உத்தரவின் பேரில் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினரும் வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தருமபுரி அருகே கோவை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் வந்த பேருந்தை அதிமுகவினர் சிலர் தீவைத்து எரித்தனர். இதில் பேருந்துக்குள் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற, மூன்று மாணவியர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தூக்குத் தண்டணை
இதையடுத்து, பேருந்துக்கு தீ வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பளித்தது.
தமிழக அரசு முடிவு
உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.
ஆளுநருக்கு கடிதம்
அதன்படி இதுவரை 1,600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், தருமபுரியில் 3 மாணவிகளை உயிரோடு எரித்து கொன்று ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூன்று பேரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
விடுதலையான 3 பேர்
தமிழக ஆளுநரும் ஆய்வு செய்துவிட்டு, அரசின் கோரிக்கையை நிராகரித்து கோப்பை கடந்த மாதம் திருப்பி அனுப்பி விட்டார்.
இதையடுத்து அதே கோப்பை 2-ஆவது முறையாக அனுப்பிய நிலையில் அதை ஆளுநர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பஸ் எரிப்பு குற்றவாளிகள் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக மூவரும் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 7 தமிழர்கள் தொடர்ந்து சிறையில் அடைபட்டுள்ள நிலையில் இந்த 3 பேரும் விடுதலையாகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.