தாலியை அறுத்து வீசிய திமுக புள்ளி?.. அணைக்கட்டில் என்ன நடந்தது.. போலீசுக்கு கதறி ஓடிய குடும்பம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் காந்தி... இவரது சகோதரர் சுப்பிரமணி. இவர்களுக்கு சொந்தமாக ஊனை வாணியம்பாடி மதுரா ஏரிபுதூர் கிராமத்தில், கிட்டத்தட்ட 7.45 ஏக்கர் நிலம் இருக்கிறது.
அந்த நிலத்தை அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் என்பவர் அபகரித்து விட்டதாக காந்தியும், சுப்பிரமணி குடும்பத்தினரும் குற்றஞ்சாட்டி உள்ளனர்..
எனவே, வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இவர்கள் குடும்பத்தினராக திரண்டு வந்து புகார் மனுவையும் தந்துள்ளனர்.. அந்த புகார் மனுவில் உள்ளதாவது:
சித்தப்பா
"எங்கள் அப்பாவும், எங்கள் சித்தப்பாவும் கூட்டாக சேர்ந்து 22-03-1994 அன்று ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தார்கள்.. அந்த நிலத்தை இத்தனை வருடங்களாகவே நாங்கள்தான் அனுபவித்து வருகிறோம். இதுவரை எந்த தொந்தரவும் இது தொடர்பாக இருந்தது கிடையாது.. ஊனை வாணியம்பாடி மதுரா, ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள எங்களது நிலத்தில் திமுக அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஜேசிபி மூலம் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இதை காந்தி மற்றும் சுப்பிரமணியின் மகன்கள், மகள்கள் தட்டி கேட்டுள்ளனர்.
தாலி
அப்போது கவிதா என்ற பெண்ணின் தாலியை அறுத்து வீசியுள்ளார். மேலும் அங்கிருந்த ஆட்களை வைத்து தாக்கி நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி நாங்கள் கேட்டதற்கு, எங்கள் குடும்பத்தினரை அடித்து தாக்கினார்.. கொலை மிரட்டலும் விடுத்தார்... எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு வெங்கடேசன்தான் முழுக்க முழுக்கக் காரணம் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.. அத்துடன் தங்களது நிலத்தின் பட்டா மற்றும் வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் புகார் மனு உடன் இணைத்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாலியை தந்துடுங்க
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி அலுவலக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்துள்ளனர்.. இதனிடையே, இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர், "தயவு செய்து என் தாலியை தந்துடுங்க" என்று அங்கிருந்த பிரமுகரிடம் கெஞ்சுவது போல பதிவாதி உள்ளது.. மேலும், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்த உண்மைத்தன்மை தெரியவில்லை என்றாலும், இந்த வீடியோ வெளியாகி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பழைய வீடு
ஆனால், திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறாராம்.. "அந்த நிலம் என் பெரியப்பாவிற்கு சொந்தமானது.. ஆனால், இத்தனை ஆண்டுகாலமாக எதிர்தரப்பினர் அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தார்கள்.. என் பெரியப்பா சற்று மனநிலைப் பாதிக்கப்பட்டவர்... 1993-லேயே அவரது வாரிசுகளான எங்கள் பெயர்களில், அந்த நிலத்தை உயில் எழுதி வைத்துவிட்டார். ஆனால், யாருக்கும் தெரியாமல், எதிர்த்தரப்பினர்தான் இதை பத்திரப்பதிவு செய்துள்ளார்கள்.. அந்த உயில் சமீபத்தில்தான், எங்களுக்கு கிடைத்தது, மற்றபடி, நான் யாரையுமே தாக்கவில்லை, மிரட்டவில்லை, சட்டப்படி இந்த வழக்கை சந்திப்பேன்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறாராம். எனினும், இரு தரப்பிலும் நடந்தது என்ன என்பது குறித்த விசாரணை நடக்கிறது.