வேலூர் பஸ் ஸ்டாண்டில் சினேகாவுக்கு வந்த கோபம்.. நடுரோட்டில் இப்படியுமா தம்பதிகள் செய்வாங்க?
வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த தனுஷ் என்பவரும், அவரது மனைவி சினேகாவும் நேற்று வேலூர் பஸ் ஸ்டாண்டில் நடந்து கொண்ட விதம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுரோட்டில் மது அருந்த பணம் கேட்டு கணவர் தகராறு செய்ததால், கையில் இருந்த 2 வயது பெண் குழந்தையை பஸ் ஸ்டாண்டிலேயே தூக்கி போட்டிருக்கிறார் சினேகா.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த 25 வயதாகும் தனுஷ் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சினேகா. இந்த தம்பதிக்கு ரித்திகா (2) என்ற மகள் இருக்கிறார். சினேகாவின் தந்தை தஞ்சாவூரில் வசிக்கிறார். நேற்று முன்தினம் சினேகாவின் தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் சினேகா தந்தையை பார்ப்பதற்காக மகள் ரித்திகாவை தூக்கிக்கொண்டு நேற்று காலை 11.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அவரை வழி அனுப்பி வைப்பதற்காக கணவர் தனுஷும் உடன் வந்துள்ளார்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வந்தபோது தனுஷ் மது அருந்துவதற்கு மனைவியிடம் பணம் கேட்டாராம். சினேகா பணம் கொடுக்க மறுத்துவிட்டாராம். அதனால் ஆத்திரம் அடைந்த அவர் நடுரோட்டிலேயே மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதுடன், கையால் வேகமாக தாக்கி விட்டு அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார்.
கணவனின் இந்த செயலால் கோபம் அடைந்த சினேகா, "நீயும் வேண்டாம், உன் குழந்தையும் எனக்கு வேண்டாம்" என்று கூறி இடுப்பில் வைத்திருந்த மகளை சாலையில் தூக்கி வீசி விட்டு எதிர்புறமாக சென்றுவிட்டாராம். இதில் நெற்றியில் ரத்தக்காயம் அடைந்த குழந்தை ரித்திகா கதறி அழுதிருக்கிறது. இதைக்கண்ட பொதுமக்கள் அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளார்கள். மேலும் அவர்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே சிறிது நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் குழந்தையை தேடி வந்தனர். ரித்திகாவின் நெற்றியில் காயம் இருப்பதை கண்ட அவர்கள் போலீசார் முன்னிலையில் மீண்டும் சண்டை போட்டுள்ளனர். அப்போது போலீசார் எச்சரித்ததுடன், 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ரித்திகா மற்றும் அவரின் பெற்றோரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மது குடிக்க பணம் கேட்டு கணவன் தாக்கியதால் விரக்தியில் 2 வயது குழந்தையை தாய் சாலையில் தூக்கி வீசிய சம்பவம் வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications