துரோகிகளுக்கு திமுகவில் இடமில்லை... 24 மணி நேரத்துக்குள் வெளியேற்றுவேன்... சீறிய துரைமுருகன்..!
வேலூர்: திமுகவில் துரோகிகளுக்கு இடமில்லை என்றும் கட்சிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்களை 24 மணி நேரத்திற்குள் கட்சியை விட்டு நீக்கி முரசொலியில் கட்டம் கட்டிவிடுவேன் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சீறியுள்ளார்.
சீட் கிடைக்கவில்லையே என யாரும் ஆதங்கப்பட வேண்டாம் என்று கூறிய துரைமுருகன், எல்லோருக்கும் உரிய நேரத்தில் வாய்ப்பு வரும் எனத் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
அப்பா பல்லாண்டுகளில் பெற்றதை.. வெறும் 100 நாட்களில் பெற்ற மகன்.. ஸ்டாலினுக்கு துரைமுருகன் புகழாரம்
கொரோனா தடுப்பு
மேலும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 150 நாட்கள் ஆவதாகவும் அதில் ஒரு மாதம் மட்டுமே அமைச்சர்கள் துறைரீதியான நிர்வாகத்தை பார்த்ததாகவும் எஞ்சிய நாட்கள் அனைத்தும் கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே கொரோனோ தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்ட ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
9 மாவட்டங்கள்
அமைச்சர்கள் இன்னும் முழுமையாக தங்கள் பணிகளை தொடங்கவில்லை என்றும் அடுத்த ஓராண்டுக்குள் மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தை திரும்பிப்பார்க்கும் வகையில் மாற்றிக்காட்டுவோம் எனவும் தெரிவித்தார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தால், அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் கூட அதிமுகவினருக்கு வராது எனக் கூறியுள்ளார்.
பொறுக்கமாட்டேன்
திமுகவை பொறுத்தவரை நிர்வாகிகள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறிய துரைமுருகன், சீட் கிடைக்கவில்லை என்பதற்காக யாரும் ஆதங்கமோ, கவலையோ பட வேண்டாம் எனத் தெரிவித்தார். சீட் கிடைக்காதவர்கள் தன்னை அடித்தால் கூட பொறுத்துக்கொள்வேன் எனக் கூறிய துரைமுருகன், துரோகம் செய்ய நினைத்தால் மட்டும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என எச்சரிக்கை விடுத்தார்.
துரோகம்
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் துரைமுருகன் நூலிழையில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது . தபால் வாக்குகள் கொஞ்சம் மாறியிருந்தால் கூட அவர் மாண்புமிகுவாக ஆகியிருக்க முடியாது. இதற்கு காரணம் உள்ளூர் அரசியலும் தனக்கு இழைக்கப்பட்ட துரோகமும் தான் காரணம் எனக் கருதும் அவர், தொடர்ந்து துரோகத்தை பற்றியே அனைத்து மேடைகளிலும் இவர் பேசி வருகிறார்.