அமைச்சர் துரைமுருகன் மகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள்! 7 மணி நேர காத்திருப்புக்கு பின் சோதனை
வேலூர்: காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மகன் எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புடன் காலை 7 மணியளவிலேயே 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு சென்றனர். ஆனால் வீட்டியில் யாரும் இல்லாததால், உள்ளே சென்று சோதனை செய்யமால் வீட்டின் வளாகத்திலேயே காத்திருந்தனர். கடந்த 7 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியிருக்கிறார்கள்.
முன்னதாக திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அவருக்கு சொந்தமான தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

வேலூர் காட்பாடி, காந்தி நகரில் தமிழக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மகன் எம்பி கதிர் ஆனந்த் இல்லம் உள்ளது. இன்று காலையில் 7.00 மணியளவில் திடீரென சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கதிர் ஆனந்த் இல்லத்திற்கு வந்தனர். 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுவதற்காக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனை காரணமாக சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எம்பி கதிர் ஆனந்த் வெளிநாடு சென்றுள்ளதால் அதிகாரிகள் வந்த உடனேயே சோதனையை தொடங்கவில்லை. அமைச்சர் துரைமுருகனும் சென்னையில் இருப்பதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்காமல் வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர்.
வீட்டில் உரிமையாளர் அல்லது உறவினர்கள் யாரும் இருந்தால் தான் சோதனை நடத்த விதி இருப்பதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரமாக காத்திருந்தனர். வீட்டில் கட்டுமான வேலை நடந்து வருகிறது. மேமும் 2 பணியாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். இதனால் சோதனை நடத்த முடியாமல் வீட்டின் வளாகத்திலேயே இருந்தனர். இதன்பின்னர் கதிர் ஆனந்த் மின்னஞ்சல் வழியாக அனுப்பிய கடிதத்தை அடுத்து சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பின்னர், சோதனையை தொடங்கினர்.
முன்னதாக இன்று காலையில் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. வேலூர் மாநகர திமுக விவசாய அணி அமைப்பாளராக பூஞ்சோலை சீனிவாசன் இருந்து வருகிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில், 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சர் துரைமுருகனுக்கு பூஞ்சோலை சீனிவாசன் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
எதற்காக சோதனை?
கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் 10 லட்சம் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று அதே காலக்கட்டத்தில் பூஞ்சோலை சீனிவாசன் தொழிற்சாலையில் இருந்து 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக தான் அமலாக்கத்துறை அதிகாரிகளும் கணக்கில் காட்டப்படாத இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்பது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் தான் இன்று அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் தொழிற்சாலையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அமைச்சர் துரைமுருகன் மகன் வீட்டில் சோதனை செய்வதற்காக காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சோதனை தொடர்பாக வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications