திடீர் பரபரப்பு.. வேலூரில் யானை தந்தம் விற்பனை.. பாஜக நிர்வாகி உட்பட 5 பேரை கைது செய்த வனத்துறை!
வேலூர்: யானை தந்தத்தைச் சட்டவிரோதமாக விற்க முயன்றதாக பாஜக நிர்வாகி உட்பட ஐந்து பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் வேலூர் அடுத்துள்ள அரியூர் மலைக்கோடி என்ற இடத்தில் சட்டவிரோதமாக யானை தந்தத்தைக் கடத்த முயன்ற நிலையில், அவர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஒரு காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து விரிந்து கிடந்த யானைகள் இப்போது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கிறது. தந்தத்திற்காகவே பல ஆயிரம் யானைகள் வேட்டையாடி கொல்லப்பட்டன.

யானை: இந்தியாவிலும் கூட முன்பு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டே வந்தன. 1972ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் பின்னரே யானைகள் உட்பட அனைத்து பல்வேறு வனவிலங்குகளை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் யானை வேட்டையாடுவோர், யானைத் தந்தங்களைக் கடத்துவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
யானை வேட்டையாடுவதையும் யானைத் தந்தங்கள் கடத்தலையும் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இருப்பினும், அதை எல்லாம் தாண்டி ஆங்காங்கே இந்த குற்றச் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதுபோல நடக்கும் குற்றங்களை எதிர்த்தும் வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
யானை தந்தம்: வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி என்ற பகுதியில் சட்டவிரோதமாக ஒரு சிலர் யானைத் தந்தம் விற்க முயல்வதாக வனத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேலூர் வனச்சரக அதிகாரிகள் அங்கு ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி வந்த சிலரைப் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் யானைத் தந்தம் இருந்தது தெரிய வந்தது.
பாஜக நிர்வாகி: யானைத் தந்தத்தைச் சட்டவிரோதமாக விற்க முயன்ற அந்த 5 பேரையும் வேலூர் வனச்சரக அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதில் ஒருவர் பாஜக இளைஞரணி தலைவர் சரத்குமார் என்பது தெரிய வந்தது. அவர்கள் ஐந்து பேர் மீதும் போலீசார் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் சுமார் 6.5 கோடி மதிப்பிலான யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முயன்றவர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் 6.5 கிலோ எடையில் யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட 4 பொம்மைகளை அவர்கள் விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து யானையை விற்க வந்தவர்கள், வாங்க வந்தவர்கள் என மொத்தம் 12 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications