வேலூர் அருகே இடதுபுறத்திற்கு பதில் வலதுபுறம் வந்த லாரி.. அரசு பஸ் டிரைவருக்கு வீடு தேடி வந்த எமன்
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சட்டவிரோதமாக நெடுஞ்சாலையோர மரங்களை சிலர் சாலையில் வெட்டிப் போட்டதால், இடது புறத்திற்கு பதிலாக வலது புறமாக வந்த லாரி, சாலையோரம் அமர்ந்திருந்த அரசு பஸ் டிரைவர் மீது மோதியது . இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி மோட்டூர் அருகே ஸ்ரீராமுலுபட்டி கிராமத்தில் வசிப்பவர் ஜெயச்சந்திரன். இவருக்கு எழிலரசன் (வயது 35), தங்கப்பாண்டியன் (32) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் எழிலரசன் அரசு பேருந்து டிரைவராக பணியாற்றி வந்தார். தங்கப்பாண்டியன் தங்கள் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த திங்கள் அன்று காலையில் அண்ணன், தம்பி இருவரும் வீட்டின் முன்பாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளிய மரங்களை சிலர் சட்டவிரோதமாக வெட்டி சாலையில் போட்டுக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று வந்தது.
புளியமர கட்டைகள் கீழே வெட்டி போட்டதால் இடது புறத்திற்கு பதிலாக வலது புறமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அங்கு அமர்ந்திருந்த எழிலரசன் மற்றும் தங்கபாண்டியன் மீது பயங்கரமாக மோதி, அருகில் இருந்த குடிசை மீது மோதி நின்றது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதில் எழிலரசன் உயிருக்கு போராடியதால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இறந்து போனார்.
அதைத்தொடர்ந்து மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இறந்த அரசு பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் குடியாத்தம் சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், பரதராமி காவல்நிலைய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்டோர் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காவல்துறைஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் பலியான எழிலரசனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
மரத்தை சட்டவிரோதமாக வெட்டியவர்: கல்லப்பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவரான மோகன் ஆவார். இவர் தான் திங்கட்கிழமை குடியாத்தம்- சித்தூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீராமுலுப்பட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளிய மர கிளைகளை தன்னிச்சையாக சட்டவிரோதமாக வெட்டி சாலையில் போட்டதாக புகார் எழுந்தது. சாலையில் மரத்தை வெட்டிப்போட்டதால் தான், அந்த வழியாக வரும் கனரக வாகனம் இடது புறமாக செல்வதற்கு பதில் வலது புறமாக சென்று விபத்தில் சிக்கி, பஸ் டிரைவர் எழிலரசன் உயிரிழந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குடியாத்தம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் யோகராஜ் பரதராமி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கல்லப்பாடி ஊராட்சி மன்ற தணைத்தலைவர் மோகன் மீது பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications