சீரியஸாக இருந்தவரை அழைக்கவே சென்றேன்.. எடப்பாடி மிரட்டிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. பரபரப்பு விளக்கம்
வேலூர்: ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நேற்று வேலூர் அணைக்கட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக தொண்டர்களை அச்சுறுத்தும் வகையில் ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் அனுப்புகின்றனர். தொடர்ந்து அதிமுக கூட்டங்களில் ஆளில்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்கிறார்கள். அடுத்த கூட்டத்தில் இது போன்று வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டி வருபவரை நாங்கள் நோயாளி ஆக்கி அதே ஆம்புலன்சில் அனுப்பிவிடுவோம் என எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம்,அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார் அப்போது அவர், ''இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்துவருகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ்
எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது. ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை,.
ஸ்டாலின் அவர்களே நீங்க என்னென்ன திட்டங்களை நிறுத்தினீர்களோ, அந்த திட்டங்கள் எல்லாமே அடுத்த அதிமுக ஆட்சியில் தொடரும்.அணைக்கட்டு மக்கள் விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள். விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசுக்கு துப்பில்லை. திறமையான அரசு என்றால் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதி 100 கோடி ரூபாய் ஒதுக்கி, அண்டை மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்து இங்கு கொடுத்தோம். இப்போது விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாத பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார், என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம்
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நேற்று வேலூர் அணைக்கட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் நோயாளி ஒருவரை ஏற்றவே அங்கே சென்றேன். பொதுவாக நோயாளி மோசமான உடல்நிலையில் இருந்தால், அவரை அழைக்க செல்லும் போதும் ஆம்புலன்ஸ் விளக்கு போட்டு செல்வோம். அப்படிதான் சென்றேன்.
அந்த வழிதான் எளிமையான வழி என்பதால் அப்படியே சென்றேன். சென்ட்ராயன் என்ற 60 வயது நபருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் அழைக்க சென்றேன். நான் சென்ற போது 10 மணி. இரவு 10 மணிக்கு பேரணி முடிந்திருக்கும் என்பதால் அப்படியே சென்றேன். ஆனால் அங்கே கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. வேறு வழியில்லாமல் அதே வழியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது, என்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications