'மந்திரி வர்றாரு, மச்சான் வர்றாருன்னு செய்தால்'.. நமக்கு இது அசிங்கம்.. அமைச்சர் துரைமுருகன் காட்டம்
வேலூர்: துரைமுருகன் தொகுதியே இப்படி இருக்கு என யாராவது சொன்னால் நமக்கு தான் அசிங்கம் என்றும் என்னுடைய தொகுதியிலேயே சாலைகள் கொத்தி கொத்திப் போடப்பட்டுள்ளதால் நடப்பவர்கள் விழுந்து தத்தி தத்தி போகும் நிலை உள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் வேதனை தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேய நல்லூரில் உள்ள காந்தி நகரில் சாலைகளின் நிலை குறித்து அமைச்சர் பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.
திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், மிக எதார்த்தமாக எதையும் பேசுவார். சில சமயங்களில் தக்லைப் செய்யவும் தயங்கமாட்டார்.. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் போகிறே போக்கில் பேசிவிட்டு போவார். ஆட்சியில் இருப்பவர்,அதிகாரத்தில் இருப்பவர் என இவரால் கலாய்க்கப்படாதவர்கள் லிஸ்ட் மிகவும் குறைவு.

அண்மையில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று இளைஞரணி நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். அதன்பின், அமைச்சர் எ.வ.வேலு புத்தக வெளியீட்டுவிழாவில் ரஜினிகாந்த் அதே விஷயத்தை பேசியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த் அப்போது பேசும்போது, "ஒருபள்ளியில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்துவிடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமில்லை. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டுசெல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளனர். அமைச்சர் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர்" என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, "வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது" என்று பதிலடி கொடுத்தார். ரஜினிகாந்த் விஷயம் சாம்பிள் தான் சொந்த கட்சியினர், அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரையும் எந்த இடம் என்று எல்லாம் பார்க்காமல் தடாலடியாக விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டவர் துரைமுருகன். இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் தனது சொந்த தொகுதியில் சாலையின் நிலை குறித்து வேதனை தெரிவித்து பேசிய வீடியோ கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை சார்பில் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 24 கடைகளை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். பின்னர் தன்னுடைய தொகுதியில் சாலைகளின் நிலை குறித்து பேசினார். அப்போது அவர் வேலூர் காட்பாடி அருகே காங்கேய நல்லூரில் உள்ள காந்தி நகரில் சாலைகள் கொத்தி கொத்தி போடப்பட்டுள்ளது பற்றி பேசினார். அப்போது அவர் கூறும் போது, சிமெண்ட் ரோடு போடுவதற்காக சாலைகளை கொத்தி கொத்தி போடுகிறார்கள், பின்னாடியே சாக்கடை அமைப்பவர்கள் கொத்தி போடுகிறார்கள். அதன்பின்னர் மின்சார வாரியத்தினரும் சாலைகளை கொத்தி கொத்தி போடுகிறார்கள்.

இப்படி எல்லாரும் சாலையை கொத்தி கொத்தி போடுகிறார்கள். மந்திரி வருகிறார், மச்சான் வருகிறார் என்று வேலைகளை உடனடியாக அவசர கதியில் செய்யக்கூடாது.. நம்மை பார்த்து, இவர் எம்எல்ஏவாக இருக்கும் தொகுதி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் என்று யாராவது சொன்னால் நமக்கு அது அசிங்கம். உடனடியாக என்னென்ன வேலைகளை செய்ய வேண்டுமோ, எல்லா வேலைகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சில நேரங்களில் அவசரப்பட்டு சில பணிகளை செய்வதால் பிரச்சனையாகிறது. மந்திரி வர்றார், மச்சான் வர்றார் என்று திகட்டுற வேலை வேண்டாம்.. திருப்தியாக வேலைகளை செய்ய வேண்டும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications