ED எதுக்கு பாவம் கஷ்டப்பட்டு கதவை தட்டணும்? திறந்தே வச்சிருக்கேன்.. அண்ணாமலைக்கு துரைமுருகன் ரிப்ளை!
வேலூர்: அமலாக்கத்துறை என் வீட்டு கதவை தட்ட வேண்டாம். அவர்களுக்காக கதவை திறந்தே வைத்திருக்கிறேன் என அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம்” என்றும் தெரிவித்தார்.

மேலும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டு கதவை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை தட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் கூறியிருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த துரைமுருகன், “அமலாக்கத்துறை ஒன்றும் எங்கள் வீட்டு கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் கூட அவர்களுக்கு வேண்டாம். நாங்கள் கதவை திறந்தே வைத்திருக்கிறோம்” என்று பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அண்ணாமலை என்ன பொருளாதார நிபுணரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பெரிய பொருளாதார நிபுணர்கள் எல்லாம் தமிழ்நாடு முன்னேறி இருப்பதாக சான்றளித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் அதிக சீட்கள் கேட்பதாக தகவல் வருகிறதே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு துரைமுருகன், “இந்த மாதிரி வதந்திகளை பற்றி கேட்டு, அதற்கு நான் பதில் சொல்லி, அப்புறம் துரைமுருகன் இப்படிச் சொன்னார் எனப் போட்டு குட்டையைக் குழப்பி விடுவீர்கள்” என சிரித்தபடி கூறினார்.












Click it and Unblock the Notifications