294 நாட்களுக்கு பிறகு.. முக அழகிரியின் மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
வேலூர்: முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சுமார் 294 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார். துரை தயாநிதி கடந்த டிசம்பர் மாதம் தனது வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது வீட்டில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் துரை தயாநிதிக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவருக்கு தொடர்ந்து பிசியோதரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை நேரில் சென்று இருமுறை முதல்வர் மு.க ஸ்டாலின் பார்த்து விட்டு நலம் விசாரித்துவிட்டு வந்தார். அதேபோல திமுக எம்பி கனிமொழி உள்பட குடும்பத்தினர் பலரும் அவரை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதி பூரண குணம் அடைந்தார். இதையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 6 மாத காலமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதி பூரண உடல் நலம் பெற்றது அழகிரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட துரை தயாநிதி, தனது காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி வெளியேறிய போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், செய்தியாளர்களை படம் பிடிக்க விடாமல் தடுக்க முற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதி 294 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications