மாணவிகளிடம் தீவிரவாதிகள் போல சோதனை நடத்துவதா.. முத்தரசன் கண்டனம்
மாணவர்களிடம் சோதனை நடத்தியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
வேலூர்: நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளிடம், தீவிரவாதிகள் போல் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நடந்து முடிந்த தேர்தலிலும், நடக்க உள்ள இடைத்தேர்தலிலும், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிதான் வெற்றி பெறும்.

அதிமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய உள்ளனர். சபாநாயகரும் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 3 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
மக்களை சந்திக்க அதிமுகவினருக்கு பயம். அதனால்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளி போட்டு வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் வீட்டு வரி, குடிநீர் வரிகள் பல மடங்காக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், அந்த மாவட்டங்களில் எவ்வித வறட்சி நிவாரண பணிகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. தண்ணீர் பஞ்சமும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்னியர் சமுதாய மக்கள் குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை. பொன்பரப்பியாக இருந்தாலும் சரி, குச்சிபாளையமாக இருந்தாலும் சரி, தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் நடந்த 'நீட்' தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.
தீவிரவாதிகளை விட அதிகளவு மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாணவிகளிடம் கம்மல், மூக்குத்தி அணிய கூடாது என்று கெடுபிடிகள் செய்யப்பட்டன. நீட் தேர்வில் பல குளறுபடிகள் உள்ளன. நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பின்னடைவு. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.












Click it and Unblock the Notifications