திருப்பத்தூர் அருகே திமுக பிரமுகரை வெட்டி, கல்லைப் போட்டு கொடூரமாக கொன்ற கும்பல்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே முன்விரோத காரணமாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (44) திமுக பிரமுகரான இவர் அந்த பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, மதுபாட்டில் விற்பனை போன்ற தொழில் செய்து வந்துள்ளார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. முன் விரோத காரணமாக இவரை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து பார்த்திபன் வெளியே வந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பார்த்திபன் சென்ற போது வழிமறித்த மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து யாரும் பார்க்கும் முன் தப்பி சென்றுள்ளனர்.
சென்னை அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை.. கோயில் அருகே நடந்த பயங்கரம்!
இந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர். அதை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏற்கனவே கோவில் பிரச்சனை காரணமாக அவ்வப்போது அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக பார்த்திபனை கொலை செய்துள்ளார்களா அல்லது வேறு காரணமா என்று கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.