மது ஒழிப்பு போராளி நந்தினி, தந்தை ஆனந்தன் ஜாமீனில் விடுதலை
திருப்பத்தூர்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மது ஒழிப்புப் போராளி வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராக தந்தையுடன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த போதே பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகவும் நந்தினி குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் 2014-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது.
இவ்வழக்கில் வாதாடிய நந்தினி, மதுபானம் உணவுப் பொருளா? போதைப் பொருளா? என கேள்வி எழுப்பினார். இதில் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி, நந்தினிக்கும் அவரது தந்தை ஆனந்தனுக்கும் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி சிறை தண்டனை விதித்தார்.
நந்தினிக்கு கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதனிடையே நந்தினி மற்றும் தந்தை ஆனந்தனுக்கு ஆதரவாக போராடப் போவதாக அறிவித்த அவரது சகோதரி நிரஞ்சனாவும் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நந்தினியின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications