வேலூர் அரசு மருத்துவமனையில் ஷாக்.. பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியரால் பரபரப்பு
வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு குளுக்கோஸ் உள்ளிட்ட மருந்துகளைச் செலுத்துவதற்காக குழந்தையின் கையில் போடப்படிருந்த டேப்பை அகற்றும்போது குழந்தையின் கட்டை விரலை செவிலியர் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் என்பது பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. அனைத்து விதமான நோய்களுக்கும் உயர் தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சில சமயங்களில் அரசு மருத்துவமனைகளில் அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்த வகையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்காக கையில் போடப்பட்டிருந்த டேப்பை அகற்றும்போது குழந்தையின் கை கட்டைவிரலை செவிலியர் வெட்டியுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், முள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (30). இவரது மனைவி நிவேதா (24). நிறைமாத கர்ப்பிணியான நிவேதாவிற்கு மே 24 ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது, குழ்தையின் கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்கான ஊசி போடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த ஊசியை மாற்றுவதற்காக குழந்தையின் வலது கையில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை கைகளால் பிரித்து எடுப்பதற்குப் பதிலாக கத்திரிக்கோலை பயன்படுத்தியுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக டேப்பை நீக்கும்போது செவிலியர்கள் குழந்தையின் வலது கை கட்டை விரலையும் சேர்த்து வெட்டியுள்ளனர்.
வலி தாங்க முடியாமல் அந்தப் பச்சிளம் குழந்தை கதறி அலறத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செவிலியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பெற்றோர், உறவினர்கள் வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக பச்சிளம் குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். அங்கு குழந்தைக்கு வலது கையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் சிகிச்சைக்காக வரும் நிலையில், பச்சிளம் குழந்தையின் விரல் வெட்டப்பட்டுள்ள சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications