ஜெயலட்சுமி செய்த ஷாக் காரியம்.. பரிதாபமாக முடிந்த ஒரு உயிர்.. ஆண்டிப்பட்டியை மிஞ்சிய வேலூர் சிசுகொலை
ஒருநாள் பெண் சிசுவை எருக்கம்பால் ஊற்றி கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்
வேலூர்: அடுத்து என்னென்ன நடக்குமோ என்று ஒவ்வொரு நிமிட பீதியில் நாம் இருந்தால், ஜெயலட்சுமி என்பவர், தனக்கு குழந்தை பிறந்த மறுநாளே எருக்கம் செடியின் பாலை எடுத்து வந்து அதன் வாயில் ஊற்றி அசால்ட்டாக கொன்றுள்ளார்.. இதை பற்றி கேட்டதற்கு இன்னொருத்தருக்கு பிறந்த குழந்தையை நான் எப்படி வைத்திருப்பது என்று விளக்கமும் தந்தார்.. இப்போது இவரை கைது செய்து உள்ளே வைத்துள்ளது போலீஸ்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அருகே உள்ளது கல்லாபாறை என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் பெருமாள்.. இவரது மனைவி ஜெயலட்சுமி 34 வயதாகிறது.. இவர்கள் கூலி வேலை செய்கிறார்கள்.. 2 மகன்கள் உள்ளனர்.
ஆனால் கணவன்-மனைவிக்கு அடிக்கடி தகராறு வந்து கொண்டே இருக்கவும், கருத்துவேறுபாடு காரணமாக 5 வருஷத்துக்கு முன்னாடியே ஜெயலட்சுமி பிரிந்துவந்துவிட்டார்.. தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.. இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஹரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் இவர் கர்ப்பமாகி உள்ளார்.
கர்ப்பம்
ஜெயலட்சுமி கர்ப்பம் என்று தெரிந்ததுமே ஹரி எஸ்கேப்.. 4 மாசத்துக்கு முன்னாடியே ஆளை காணோம்.. அதனால் யாருடைய துணையுமின்றி கடந்த 20ம் தேதி வீட்டிலேயே ஜெயலட்சுமி பெண் குழந்தையை பெற்றுள்ளார். ஆனால் மறுநாளே அந்த சிசுவுக்கு எருக்கம் செடியின் பாலை எடுத்து வந்த வாயில் ஊற்றி உள்ளார்.
கிணற்றில் சிசு
இதை குடித்த சிசு கொஞ்ச நேரத்திலேயே இறந்துவிட்டது.. பிறகு அதனை ஒரு துணியில் சுற்றி கோணிப்பையில் போட்டு ஒரு கிணற்றில் வீசி விட்டார்.. அடுத்தடுத்த நாளில் கிணற்றில் இருந்து நாற்றம் எடுக்க தொடங்கியது.. அப்போதுதான் அந்த பகுதி மக்கள் கிணற்றில் எட்டி பார்க்கவும் கோணிப்பை மிதந்தபடி கிடந்தது.. உடனடியாக விஏஓ தீபா, வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளிக்கவும் அவர்கள் விரைந்து வந்தனர்..
வாக்குமூலம்
கிணற்றில் இருந்து கோணிப்பையை எடுத்து பார்த்தனர். அதில், பெண் சிசு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் குழந்தையை கொன்று கிணற்றில் வீசியது ஜெயலட்சுமி என்று தெரியவந்தது. இது தொடர்பாக அவர் சொன்னபோது, "வேறு ஒருவருக்கு பிறந்ததால் நான் எப்படி அதை வைத்திருக்க முடியும், அதனால்தான் கொன்றேன்" என்றார். இதன்பின்னர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளிப்பால்
இதுவரை தென்மாவட்டங்களில் மட்டுமே தலைதூக்கி வந்த பெண்சிசு கொலை வடமாவட்டங்களையும் பீடித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.. இதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.. இந்த எருக்கம்பால், கள்ளிப்பால்களுக்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும்.. இது சம்பந்தப்பட்டவர்களையும் தூக்கி உள்ளே வைத்து கடுமையான தண்டனை தந்தால்தான் சரிப்பட்டு வரும்!