ஐடி ரெய்டுக்கு வந்தோம்..மத போதகர் வீட்டிற்குள் புகுந்த கும்பல்..சுற்றி வளைத்த மக்கள்..பரபரத்த வேலூர்
வேலூர்: வேலூர் குடியாத்தத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் என சொல்லிக்கொண்டு மத போதகர் வீட்டிற்குள் நுழைந்த 8 பேர் ஐடி கார்டு கேட்டதும் தலை தெறிக்க ஓடினர். இந்த கும்பலை சேர்ந்த ஒருவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இது குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் புகாரின் அடிப்படையிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது வழக்கம். பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பல முக்கியஸ்தர்களுக்கு அவ்வப்போது இதுபோன்ற சோதனைகள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

வருமான வரி சோதனை என்றாலே சோதனைக்கு உள்ளாகும் நபர்களுக்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டு விடும். கணக்கில் வராத பணம், வரி ஏய்ப்பு, சட்ட விரோத முதலீடு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு உரிய அபாராதம் வசூலிக்கப்படும். அதுபோக அமலாக்கத்துறை கூட பின்னாலேயே வந்து விசாரணை நடத்த வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே வருமான வரித்துறை சோதனை என்றாலே ஒரு வித பதற்றம் ஏற்படும்.
தொழில் அதிபர்களாக இருந்தாலும் சரி அரசியல் பிரமுகர்களாக இருந்தாலும் சரி வருமான வரி ரெய்டு என்றால் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தி விட்டுவிடும். சரி.. இதெல்லாம் இருக்கட்டும். வேலூர் குடியாத்தத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு மதபோதகர் வீட்டிற்குள் ஒரு கும்பல் புகுந்துள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்:-
வேலூர் குடியாத்தம் பகுதியில் கிறிஸ்தவ மதபோதகர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் திடீரென வருமான வரித்துறையில் இருந்து வந்திருப்பதாகவும் சோதனை நடத்த இருப்பதாகவும் 8 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், மத போதகர் பிரான்சிஸ் ஐடி கார்டு காட்டுமாறு கேட்டார். இதனால், பிரான்சிசை அந்த கும்பல் இழுத்துச் சென்றது.
இதைப்பார்த்து பதறிப்போன மதபோதகர் பிரான்சிஸின் மனைவி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மத போதகர் வீட்டிற்கு திரண்டனர். இதைப் பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். எனினும் ஒருவரை மட்டும் அங்கு திரண்ட மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு மதபோதகர் வீடிற்குள் நுழைந்த கும்பலை சேர்ந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அந்த நபர் சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கும் திட்டத்துடன் வீட்டிற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் போல நுழைந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications