அமைச்சர் துரைமுருகன் விழாவில் மின்தடை! மேலும் 2 பொறியாளர்கள் டிரான்ஸ்பர்! அதிரடி ஆக்ஷன்!
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் மின் தடை ஏற்பட்ட நிலையில் மேலும் 2 மின் வாரிய உதவி பொறியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர் நிகழ்ச்சி நடக்கும் தகவல் முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டும் கவனக்குறைவாக இருந்திருப்பது விசாரணையில் தெரியவந்ததால் இந்த டிரான்ஸ்பர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகனை பொறுத்தவரை அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்பதும் ஆளுங்கட்சியான திமுகவில் பொதுச்செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

காட்பாடியில் விழா
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மூத்த அமைச்சரும் காட்பாடி மண்ணின் மைந்தருமான துரைமுருகன் கலந்துகொண்டார். மிதிவண்டிகளை வழங்கிவிட்டு அவர் பேச ஆரம்பித்த நேரத்தில் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மின் வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு இது குறித்து கொண்டு சென்றார்.

துரைமுருகன் கோபம்
ஆனாலும் உடனடியாக மின்சாரம் வரவில்லை. இதனால் கோபமடைந்த அமைச்சர் துரைமுருகன் அந்த நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டார். மின் தடைக்கு காரணம் என்ன, யாரெல்லாம் அலட்சியமாக இருந்தார்கள் என்ற விசாரணையை மாவட்ட நிர்வாகமும், மின் வாரிய உயர் அதிகாரிகளும் தொடங்கினர். அதில் தாராபடவேடு மின்வாரிய உதவி பொறியாளர்கள் கிரன்குமார், சிட்டி பாபு ஆகியோர் கவனக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டதால் அவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் 2 பேர் மாற்றம்
இதனிடையே இந்த விவகாரம் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. இதையடுத்து அவரும் தன் பங்குக்கு வேலூர் மாவட்ட மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக்கிறார். மேலும், அலட்சியமாக செயல்பட்டவர்களை உடனடியாக டிரான்ஸ்பர் செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மேலும் 2 மின் வாரிய உதவி பொறியாளர்கள் பாலாஜி, தனலட்சுமி ஆகியோர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.

கவனம் தேவை
இவர்கள் இருவரும் மின்வாரியத்தில் ஏஇ பணிக்கு சேர்ந்து சில மாதங்களே ஆவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இனி வரும் நாட்களில் இது போன்ற புகார்கள் எழாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மின்வாரிய பொறியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications